
தீபாவளிப் பண்டிகைக்கு வாழ்த்து தெரிவித்து, கமலா ஹாரிஸும், ஜோ பைடனும் அமெரிக்காவிலும், உலகம் முழுவதிலும் உள்ள ஹிந்துக்களைப் புறக்கணித்துவிட்டனர் எனப் பதிவிட்டுள்ளார் அமெரிக்கா முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்.
தன் எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளவை,
`வங்கதேசத்தில் இந்துக்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் பிற சிறுபான்மையின மக்களுக்கு எதிராக நடைபெறும் தாக்குதல்கள் மற்றும் கொள்ளை சம்பவங்களை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். அங்கே குழப்பமான ஒரு சூழலே நீடிக்கிறது.
நான் இருந்திருந்தால் இவ்வாறு நடந்திருக்காது. கமலா ஹாரிஸும், ஜோ பைடனும் அமெரிக்காவிலும், உலகம் முழுவதிலும் உள்ள ஹிந்துக்களைப் புறக்கணித்துவிட்டனர். இஸ்ரேல் முதல் உக்ரைன் வரை, நம்முடைய தெற்கு எல்லை வரை பேரழிவு ஏற்பட்டுள்ளது. ஆனால் நாங்கள் மீண்டும் அமெரிக்காவை வலிமையாக மாற்றி, வலிமையின் வழியாக அமைதியைக் கொண்டு வருவோம்!
தீவிர இடதுசாரிகளின் மத எதிர்ப்புக் கொள்கையை எதிர்த்து அமெரிக்காவில் உள்ள ஹிந்துக்களைப் பாதுகாப்போம். உங்கள் சுதந்திரத்துக்காக நாங்கள் போராடுவோம். எனது ஆட்சியின் கீழ், இந்தியாவுடனும், எனது நல்ல நண்பருமான பிரதமர் மோடியுடனும் உள்ள நமது மேம்பட்ட உறவுகளை வலுப்படுத்துவோம்.
உங்கள் சிறு வியாபாரங்களை அதிக கட்டுப்பாடுகள் மற்றும் வரிகள் மூலம் கமலா ஹாரிஸ் அழித்துவிடுவார். இதற்கு நேர்மாறாக, நான் வரிகளை குறைத்தேன், கட்டுப்பாடுகளைக் குறைத்தேன், அமெரிக்காவின் ஆற்றலை விடுவித்து, வரலாற்றில் மிகப்பெரிய பொருளாதாரத்தைக் கட்டமைத்தேன். நாங்கள் அதை மீண்டும் செய்வோம், முன்னெப்போதையும் விட பெரியதாகவும் சிறப்பாகவும் செய்வோம். மேலும் அமெரிக்காவை மீண்டும் சிறந்ததாக மாற்றுவோம்.
அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள். இந்த தீபத் திருவிழா தீமையை அழித்து நன்மையின் வெற்றிக்கு வழிவகுக்கும் என்று நம்புகிறேன்’ என்றார்.