
ஜப்பானில் ஆளும் கட்சியாக உள்ள லிபரல் டெமாக்ரடிக் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சனே தகைச்சி, விரைவில் அந்நாட்டின் முதல் பெண் பிரதமராகப் பதவியேற்கவுள்ளார்.
ஜப்பானில் லிபரல் டெமாக்ரடிக் கட்சியின் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. இதன் தலைவராக ஷிகெரு இஷிபா பொறுப்பு வகித்து வந்தார். மேலும், அந்நாட்டின் பிரதமராகவும் இருந்தார். கடந்த 70 ஆண்டு கால வரலாற்றில், லிபரல் டெமாக்ரடிக் கட்சி, பலமுறை ஆளுங்கட்சியாக இருந்துள்ளது. இதற்கிடையில் கட்சிக்குள் நிலவியல் உட்கட்சிப் பூசல் உள்ளிட்ட பல காரணங்களால் நாடாளுமன்றத்தில் அக்கட்சி பெரும்பாண்மையை இழந்தது. இதனால், தனது ஓராண்டு கால பிரதமர் பதவியை ஷிகெரு இஷிபா ராஜினாமா செய்தார். கட்சியின் தலைவர் பதவியிலிருந்தும் விலகினார்.
இதையடுத்து, கட்சியின் தலைமைக்கான தேர்தல் நடைபெற்றது. அதன் முதல் கட்டத்தில் மொத்தமுள்ள 589 வாக்குகளில் 183 வாக்குகளைப் பெற்று சனே தகைச்சி முன்னேறினார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஷின்ஜிரோ கெய்சுமி, 164 வாக்குகளப் பெற்றார். இரண்டாவது சுற்றில், சனே தகைச்சியை விட ஷின்ஜிரோ கொய்சுமி அதிக வாக்குகளைப் பெற்றார். எனினும், அதன் பிறகான தீர்க்கமான சுற்று வாக்கெடுப்பில் சனே தகைச்சி வெற்றி பெற்றார். இதையடுத்து லிபரல் டெமாக்ரடிக் கட்சியின் தலைவராக சனே தகைச்சி பொறுப்பேற்றார்.
இதைத் தொடர்ந்து இந்த மாதம் அவர் ஜப்பான் நாட்டின் பிரதமராகப் பதவி ஏற்க உள்ளார்.
லிபரல் டெமாக்ரடிக் கட்சி தலைமையிலான கூட்டணி, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தைக் கொண்டிருக்கவில்லை. இதனால் நாடாளுமன்றத்தில் எழுப்பப்படும் நம்பிக்கை வாக்கெடுப்பிலும் சனே தகைச்சி வெற்றி பெற வேண்டும். அதேபோல், ஊழல் மோசடிகளால் மக்களின் அதிருப்தி, வீழ்ச்சியடைந்து வரும் பொருளாதாரம், அமெரிக்காவுடனான நல்லுறவை ஏற்படுத்துதல், பணவீக்கம் போன்ற நாட்டின் நிர்வாகத்தில் உள்ள பல்வேறு பிரச்னைகளையும் சனே தகைச்சி எதிர்கொள்ள வேண்டும் என்று கூறப்படுகிறது.