
பிரதமர் மோடியுடன் தொலைபேசியில் உரையாடியது தனக்குக் கிடைத்த கௌரவம் என்று பிரபல அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க் கருத்து தெரிவித்துள்ளார்.
கடந்த பிப்ரவரியில், அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற பிறகு, அரசு முறைப் பயணமாக பிரதமர் மோடி அமெரிக்காவுக்குச் சென்றார். அப்போது, தலைநகர் வாஷிங்டன் டிசியில் உள்ள பிளையர் ஹவுசில் வைத்து எலான் மஸ்கை பிரதமர் மோடி சந்தித்தார்.
விண்வெளி ஆராய்ச்சி, செயற்கை நுண்ணறிவு, புத்தாக்க கண்டுபிடிப்பு, நிலையான வளர்ச்சி ஆகிய பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பு மேற்கொள்வது தொடர்பாக இருவரும் ஆலோசனை மேற்கொண்டார்கள்.
இந்நிலையில், எலான் மஸ்குடன் தொலைபேசி வாயிலாக நேற்று (ஏப்.18) பிரதமர் மோடி உரையாடினார். இது தொடர்பாக தன் எக்ஸ் கணக்கில் வெளியிட்ட பதிவில் பிரதமர் மோடி கூறியதாவது,
`இந்த ஆண்டின் தொடக்கத்தில் வாஷிங்டன் டி.சி.யில் நடைபெற்ற எங்கள் சந்திப்பின்போது, நாங்கள் விவாதித்தவை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து எலான் மஸ்குடன் பேசினேன். தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க கண்டுபிடிப்புத் துறைகளில் மேற்கொள்ளப்படும் ஒத்துழைப்புகளின் மகத்தான ஆற்றல் குறித்து நாங்கள் விவாதித்தோம். இந்த துறைகளில் அமெரிக்காவுடனான நமது ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் இந்தியா உறுதியாக உள்ளது’ என்றார்.
இதைத் தொடர்ந்து, மோடியின் பதிவைக் குறிப்பிட்டு, எலான் மஸ்க் வெளியிட்ட பதிவில் கூறியதாவது,
`பிரதமர் மோடியுடன் உரையாடியது எனக்குக் கிடைத்த கௌரவம். இந்த வருடத்தின் இறுதியில் நான் இந்தியாவுக்கு வரவுள்ளதை ஆவலுடன் எதிர்நோக்குகிறேன்’ என்றார்.
இந்தியாவில் டெஸ்லா கார் உற்பத்தி ஆலை தொடங்குவது தொடர்பாக, தொலைபேசி பேச்சுவார்த்தையின்போது இருவரும் ஆலோசனை மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது. அத்துடன், டாடா குழுமத்துடன் இணைந்து கூட்டு முயற்சியின் அடிப்படையில் உளவு செயற்கைக் கோள்களை தயாரிக்கும் நடவடிக்கையில் எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் ஈடுபடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.