இம்ரான் கான் மற்றும் அவரது மனைவிக்கு எதிராக விதிக்கப்பட்ட 14 ஆண்டுகள் சிறைத் தண்டனையை இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
பரிசுப் பொருள் ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பிபி ஆகியோருக்கு 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. பொதுத் தேர்தலுக்கு சில நாள்களுக்கு முன்பு கடந்த ஜனவரி 31-ல் விசாரணை நீதிமன்றத்தால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்த வழக்கில் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவிக்குப் பிறப்பிக்கப்பட்ட 14 ஆண்டுகள் சிறைத் தண்டனையை ரத்து செய்து இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், ரம்ஜான் விடுமுறைக்குப் பிறகு இந்த வழக்கு விசாரிக்கப்படும் என்றும் இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இம்ரான் கான் பிரதமராக இருந்தபோது வெளிநாட்டுத் தலைவர்கள் வழங்கிய விலை உயர்ந்த பரிசுப் பொருள்களைத் திருப்பி ஒப்படைக்காமல் தானே வைத்துக்கொண்டதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. தோஷகானா விதிப்படி, அரசு அதிகாரிகள் தங்களுக்குக் கிடைக்கும் பரிசுப் பொருள்களை விலை கொடுத்து வாங்கிச் செல்ல வேண்டும்.
ஆனால், அந்தப் பரிசை முதலில் கருவூலத்தில் டெபாசிட் செய்ய வேண்டும். இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி ஆகியோர் பரிசுப் பொருள்களை டெபாசிட் செய்ய தவறியிருக்கிறார்கள் அல்லது தங்களுடைய அதிகாரத்தைப் பயன்படுத்தி பரிசுப் பொருள்களைக் குறைந்த விலைகொடுத்து வாங்கியிருக்கிறார்கள் என்று அவர்கள் மீது குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன.