இஸ்ரேல் மீது ஈரான் நூற்றுக்கணக்கான ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதலை நடத்தியுள்ளது.
இஸ்ரேல் ராணுவம் தரப்பில் இதுதொடர்பாக கூறுகையில், "300-க்கும் மேற்பட்ட ட்ரோன்கள், ஏவுகணைகளைக் கொண்டு ஈரான் தாக்குதல் நடத்தியது. பிரான்ஸ், பிரிட்டன் மற்றும் அமெரிக்காவின் உதவியுடன் 99 சதவிகிதம் தாக்கி அழிக்கப்பட்டன. ட்ரோன் மற்றும் ஏவுகணைகள் ஈரான், ஈராக் மற்றும் ஏமனிலிருந்து ஏவப்பட்டுள்ளன" என்றனர்.
இஸ்ரேல் மீதான ஈரானின் தாக்குதலுக்கு அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், டென்மார்க், நெதர்லாந்து உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இஸ்ரேல் கோரிக்கையை ஏற்று, இந்த விவகாரம் குறித்து ஆலோசனை நடத்த ஐநா பாதுகாப்பு கவுன்சில் அவசரக் கூட்டத்தைக் கூட்டியுள்ளது.
இதுதொடர்பாக ஈரான் ஐநாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில், இஸ்ரேல் மீண்டும் ராணுவ நடவடிக்கையை மேற்கொண்டால், எங்களுடைய பதிலடி மிகவும் கடுமையானதாக இருக்கும் என்று தெரிவித்துள்ளது.
இரு தரப்பும் பதற்றத்தைத் தணித்து தூதரகப் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.