

ஐக்கிய அரபு அமீரகத்தில் லாட்டரி வென்ற இந்திய இளைஞருக்கு ரூ. 240 கோடி பரிசுத்தொகை கிடைத்துள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் யுஏஇ லாட்டரி என்ற நிறுவனம் பல்வேறு லாட்டரிகளை நடத்தி வருகிறது. இதில் அங்கு வசித்து வரும் 29 வயது இந்திய இளைஞரான அனில்குமார் பொல்லா கடந்த அக்டோபர் 18 அன்று லாட்டரி டிக்கெட்டுகளை வாங்கியுள்ளார். அதில் அவருக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிகபட்ச லாட்டரி பரிசான 100 மில்லியன் திர்ஹம் பரிசு கிடைத்துள்ளது. இதன் இந்திய மதிப்பு ரூ. 240 கோடி. அபுதாபியில் நடந்த விழாவில் அவர் பரிசுத் தொகையை பெற்றுக் கொண்டார். அதன்பின் லாட்டரி நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
“நான் இந்தியாவைச் சேர்ந்தவன். கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக நான் அபுதாபியில் வசித்து வருகிறேன். நான் எந்த மந்திரமும் செய்யவில்லை. நான் எளிமையாகத் தேர்ந்தெடுத்து 12 லாட்டரி டிக்கெட்டுகளை வாங்கினேன். அதன் கடைசி எண்கள் எனக்கு மிகவும் சிறப்பு வாய்ந்தவை. ஏனென்றால் அது என் அம்மா பிறந்த தேதியின் எண்கள். பரிசு அறிவிக்கப்பட்டபோது நான் அதிர்ச்சியடைந்தேன். இப்போது இந்தப் பணத்தைக் கொண்டு பெரிதாக என்ன செய்ய முடியும் என்று நான் யோசிக்க வேண்டும்.
விலை உயர்ந்த சூப்பர் கார் ஒன்றை வாங்க வேண்டும் என்பது என் நீண்டநாள் கனவு. இந்த மகிழ்ச்சியை 7 ஸ்டார் நட்சத்திர விடுதியில் கொண்டாடத் திட்டமிட்டுள்ளேன். என் குடும்பத்தை நான் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு அழைத்து வந்து வாழப்போகிறேன். என் பெற்றோரின் கனவுகளை நிறைவேற்றுவேன். இதிலிருந்து ஒரு பங்கு பணத்தைத் தானமாக வழங்கவுள்ளேன். இது உண்மையிலேயே தேவை இருப்போரைச் சென்றடையும். விளையாடும் ஒவ்வொருவரையும் நான் நம்பிக்கையுடன் தொடர்ந்து விளையாடுமாறு பரிந்துரைக்கிறேன். இப்பெரும் வாய்ப்பைக் கொடுத்த யூஏஇ லாட்டரி நிறுவனத்திற்கு நன்றி” என்றார்.
Anilkumar Bolla, an Indian man living in Dubai won the UAE Lottery’s first-ever 100 million Dhirhams which is more than Rs. 240 crores