கனடாவில் பஞ்சாபைச் சேர்ந்த இந்திய மாணவி பேருந்து நிலையம் ஒன்றில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
பஞ்சாபைச் சேர்ந்த 21 வயது மாணவி ஹர்சிம்ரத் ரந்தாவா. இவர் கனடாவில் ஹாமில்டனிலுள்ள மொஹாக் கல்லூரியில் பயின்று வருகிறார். தனது பணிக்குச் செல்வதற்காகப் பேருந்து நிலையத்தில் காத்திருந்த ஹர்சிம்ரத் மார்பில் குண்டு பாய்ந்துள்ளது. மருத்துவமனை கொண்டு செல்லப்பட்ட அவர் உயிரிழந்தார்.
ஹாமில்டன் காவல் துறையினர் இதுகுறித்து கூறுகையில், "வெள்ளை நிற செடான் காரில் இருப்பவர்களை நோக்கி கருப்பு நிற மெர்சிடஸ் எஸ்யுவி காரில் வந்தவர் துப்பாக்கியால் சுட்டுள்ளார். இந்தத் துப்பாக்கிச் சூட்டில் ஹர்சிம்ரத் மீது குண்டு பாய்ந்துள்ளது. இரு கார்களும் துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து சம்பவ இடத்திலிருந்து கிளம்பிச் சென்றன" என்றனர்.
ஹர்சிம்ரத் கொல்லப்படுவது அவர்களுடைய நோக்கமாக இல்லை என்பது காவல் துறையினரின் தகவல் மூலம் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும் யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை என்பதும் முதற்கட்டத் தகவலாக உள்ளது.
டொரொன்டோவில் உள்ள இந்தியத் தூதரகம், உயிரிழந்த மாணவியின் குடும்பத்தினருடன் தொடர்பிலிருப்பதாகவும் அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருவதாகவும் எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.