
இந்தியாவும், பாகிஸ்தானும் போர் நிறுத்தத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
அதிபர் டிரம்ப் இன்று (மே 10) மாலை, தன் ட்ரூத் சோஷியல் சமூக வலைதளக் கணக்கில் வெளியிட்ட பதிவில் கூறியதாவது,
`அமெரிக்கா மேற்கொண்ட தொடர்ச்சியான பேச்சுவார்த்தையை அடுத்து, உடனடி மற்றும் முழுமையான போர் நிறுத்தத்திற்கு இந்தியாவும், பாகிஸ்தானும் சம்மதம் தெரிவித்துள்ளதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறேன்.
போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்ட இரு நாடுகளின் அறிவார்ந்த செயலைப் பாராட்டுகிறேன்’ என்றார்.
முன்னதாக, பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் முனீர் மற்றும் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோரிடம் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ, பேச்சுவார்த்தை நடத்தினார்.
இரு நாடுகளுக்கு இடையிலான பதற்றத்தைத் தவிர்ப்பதற்கான பேச்சுவார்த்தையை எளிதாக்குவதற்காக, அமெரிக்கா உதவி செய்யும் என்று இருதரப்பினரிடமும் அவர் பேசியுள்ளார்.
அதிபர் டிரம்பின் அறிவிப்பைத் தொடர்ந்து, பாகிஸ்தான் துணை பிரதமர் இஷக் தர், `பாகிஸ்தானும், இந்தியாவும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளது’ என்று தன் எக்ஸ் கணக்கில் பதிவிட்டார்.