கட்சத்தீவு விவகாரம் குறித்து இந்தியா ஒருபோதும் கோரிக்கை வைத்தது கிடையாது என்பதால், இலங்கை அமைச்சரவையில் இதுகுறித்து விவாதிக்கப்படவில்லை என அமைச்சர் பண்டுலா குணவர்தனா தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் தான் கட்சத்தீவை இலங்கைக்கு விட்டுக்கொடுத்ததாக ஆங்கில நாளிதழில் வெளியான செய்தியைக் குறிப்பிட்டு பிரதமர் மோடி விமர்சனம் செய்திருந்தார். பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, கட்சத்தீவு விவகாரம் குறித்து ஆர்டிஐ மூலம் தகவல் கோரியிருக்கிறார். இந்தத் தகவல் வெளியானதிலிருந்து கட்சத்தீவு விவகாரம் மீண்டும் பேசுபொருளானது.
மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் செய்தியாளர்களைச் சந்தித்து, மீனவர்கள் கைதுக்கு கட்சத்தீவு இலங்கைக்கு விட்டுக்கொடுக்கப்பட்டது தான் காரணம் என்கிற வகையில் விளக்கமளித்தார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் இந்த விவகாரம் குறித்து கூறுகையில், இலங்கையுடன் நல்லுறவைக் கடைபிடிப்பதற்கும், லட்சக்கணக்கான தமிழர்களின் நலனுக்காக உதவும் வகையிலேயே இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி கட்சத்தீவு விவகாரத்தில் ஒப்பந்தம் கையெழுத்தானதாக விளக்கம் கொடுத்தார்.
இந்த நிலையில், இலங்கையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அந்த நாட்டு அமைச்சர் பண்டுலா குணவர்தனா, இந்த விவகாரம் குறித்து எழுப்பப்படாததால், அமைச்சரவையில் இதுகுறித்து விவாதிக்கப்படவில்லை என்று தெரிவித்தார்.