
இந்தியா பின்வாங்கினால், நிச்சயமாக இந்த விவாகரத்தை நாங்கள் பேசித் தீர்த்துக்கொள்வோம் என பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா குரேஷி தெரிவித்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீரில் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22 அன்று பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் நேபாளி உள்பட 26 பேர் உயிரிழந்தார்கள். இந்தத் தாக்குதலுக்குப் பதிலடி தரும் விதமாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாதிகளின் முகாம்களைக் குறிவைத்து நேற்று நள்ளிரவு இந்தியா தாக்குதல் நடத்தியது.
இதில் 9 பயங்கரவாத முகாம்கள் வெற்றிகரமாகத் தாக்கி அழிக்கப்பட்டதாக இந்திய அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இதற்கு ஆபரேஷன் சிந்தூர் எனப் பெயர் சூட்டப்பட்டு, பொதுமக்களுக்கு பாதிப்பு எதுவும் ஏற்படாத வகையில், தாக்குதல் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் 4 முகாம்களும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 5 முகாம்களும் அழிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா குரேஷி ப்ளூம்பெர்க் டிவிக்கு அளித்த நேர்காணலில் கூறுகையில், இந்தியா பின்வாங்கினால் நாங்கள் பேசி முடித்துக்கொள்வோம் என்று கூறியுள்ளது கவனம் பெற்றுள்ளது.
"இந்தியாதான் இதைத் தொடக்கி வைத்துள்ளது. நாங்கள் எதிர்வினையாற்றினோம், அவ்வளவே.
இந்தியா மீது ஒருபோதும் நாங்கள் எவ்வித பகையுணர்வையும் விதைக்க மாட்டோம். ஆனால், இந்தியா தாக்குதல் நடத்தினால், நாங்களும் பதிலுக்குத் தாக்குதல் நடத்துவோம். இந்தியா பின்வாங்கினால், நிச்சயமாக இந்த விவகாரத்தை முடித்துக்கொள்வோம். இதை தான் கடந்த இரு வாரங்களாகச் சொல்லி வருகிறோம்" என்றார் கவாஜா ஆசிஃப்
"எங்களுடைய இடத்தில் ஒரு இன்ச் நிலத்தைக் கைப்பற்ற இந்தியா முயற்சித்தால்கூட, கடுமையான எதிர்வினையைச் சந்திக்க நேரிடும். முழுப் படை பலத்துடன் பதிலடி தருவோம். இது எப்படி தீர்க்கப்பட வேண்டுமோ, அப்படி தீர்ப்போம்" என்று ஜியோ நியூஸுக்கு அளித்த பேட்டியில் கவாஜா ஆசிஃப் தெரிவித்துள்ளார்.