
போப் பிரான்சிஸ் மறைவை அடுத்து, புதிய போப்பை தேர்வு செய்வதற்கான பணிகள் வாடிகனில் விரைவில் தொடங்கவுள்ளன.
உடல்நிலை பாதிக்கப்பட்டு கடந்த சில மாதங்களாக சிகிச்சையில் இருந்த கத்தோலிக்க கிறிஸ்தவ மத தலைவரான 88 வயது போப் பிரான்சிஸ் நேற்று உயிரிழந்தார். இந்நிலையில், பிரான்சிஸின் உடல் புனித பீட்டர்ஸ் பேராலயத்துக்கு நாளை (ஏப்.23) உள்ளூர் நேரப்படி காலை 9 மணிக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.
இதைத் தொடர்ந்து, சனிக்கிழமை (ஏப்.26) காலை 10 மணி வரை அவரது உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்படும். அதன்பிறகு இறுதிச் சடங்குகளும், பிரார்த்தனைகளும் நடைபெறவுள்ளன. போப்பின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட சில நாட்கள் கழித்து புதிய போப்பை தேர்வு செய்வதற்கான நடைமுறைகள் அதிகாரபூர்வமாக தொடங்கும்.
போப் பதவிக்குப் புதிய நபரை தேர்தெடுக்கும் பணிகளை கார்டினல் குழு மேற்கொள்ளும். கத்தோலிக்க கிறிஸ்தவத்தில் போப்புக்கு அடுத்த நிலையில் இருக்கும் குருமார்கள் கார்டினல்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். போப்களால் நியமிக்கப்படும் கார்டினல்கள் தங்கள் ஆயுள் காலம் முழுவதும் (இறக்கும் வரை) பதவியில் நீடிப்பார்கள்.
போப்பின் மரணத்தில் இருந்து தோராயமாக 15-20 நாட்கள் கழித்து, வாடிகனில் உள்ள பேப்பல் அரண்மனையின் சிஸ்டைன் தேவாலயத்தில் கார்டினல்கள் ஒன்றாகக் கூடி வாக்கெடுப்பு நடத்தி, தங்களுக்குள் ஒருவரை புதிய போப்பாக தேர்தெடுப்பார்கள்.
இந்த நடைமுறையில் ஒரே ஒரு விதி மட்டும் பின்பற்றப்படுகிறது. 80 வயதைத் தாண்டிய கார்டினல்களுக்கு வாக்கெடுப்பில் கலந்துகொள்ளும் உரிமை இல்லை.
இன்றைய நிலவரப்படி 90-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 250-க்கும் மேற்பட்ட கார்டினல்கள் இருப்பதாகத் தகவல் தெரிவிக்கப்படுகிறது. வயது உச்சவரம்பால், இதில் 135 கார்டினல்களுக்கு மட்டுமே புதிய போப்பை தேர்தெடுப்பதற்கான வாக்கெடுப்பில் கலந்துகொள்ளும் உரிமை உள்ளது.
வாக்கெடுப்பு நடைமுறை தொடங்குவதற்கு முன்பு, அதில் பங்கேற்கும் கார்டினல்கள் ரகசியக் காப்புப் பிரமாணத்தை எடுத்துக்கொள்வார்கள். வாக்கெடுப்பு நடைபெற்று புதிய போப் தேர்வு செய்யப்படும் வரை, அவர்கள் யாருக்கும் வெளியுலகத்துடன் தொடர்பு இருக்காது.
அத்துடன் கைபேசி போன்றவற்றை உபயோகிக்க அவர்களுக்கு அனுமதி கிடையாது. வாக்கெடுப்பு முடியும் வரை, பேப்பல் அரண்மனையில் இருக்கும் மார்த்தா ஹவுஸ் என்ற இடத்தில் அவர்கள் அனைவரும் தங்குவார்கள். அதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் முன்கூட்டியே மேற்கொள்ளப்படும்.
வாக்கெடுப்பின் முடிவில் மூன்றில் இரண்டு பங்கு கார்டினல்களின் வாக்குகள் கிடைத்தால் மட்டுமே, போப் பதவிக்கு ஒருவர் தேர்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்படுவார். அதுவரை எத்தனை நாள்கள் ஆனாலும், தினமும் இரு முறை வாக்கெடுப்பு நடைபெறும்.
ஒவ்வொரு வாக்கெடுப்பின் முடிவிலும், தேவாலயத்தின் புகைபோக்கியில் இருந்து கருப்பு நிறப் புகை வெளிவந்தால் போப் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்றும், வெள்ளை நிறப் புகை வெளிவந்தால் போப் தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டார் என்றும் அர்த்தம்.
வாக்கெடுப்பு நடத்தி கார்டினல் ஒருவர் புதிய போப்பாக தேர்வு செய்யப்பட்ட பிறகு, இந்த தேர்தல் முடிவை அவர் ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில், புதிய போப்பாண்டவராக முறைப்படி அறிவிக்கப்படுவார்.