பெய்ருட் தாக்குதலில் ஹெஸ்புல்லா தலைவர் மரணம்: இஸ்ரேல் ராணுவம்

இஸ்ரேல் ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் இந்தச் செய்தியை எக்ஸ் தளப் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
பெய்ருட் தாக்குதலில் ஹெஸ்புல்லா தலைவர் மரணம்: இஸ்ரேல் ராணுவம்
1 min read

லெபனான் தலைநகர் பெய்ருட்டில் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஹெஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது.

ஹெஸ்புல்லா ஆயுதக் குழுவுக்கு ஏறத்தாழ 30 ஆண்டுகளாகத் தலைமை வகித்து வருபவர் நஸ்ரல்லா. பெய்ருட்டின் தெற்கில் ஹெஸ்புல்லாவின் தலைமையகத்தில் ஒரு சந்திப்புக் கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த இடத்தைச் சரியாகக் குறிவைத்து நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் நஸ்ரல்லா கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

நஸ்ரல்லா கொல்லப்பட்டுள்ளதை இஸ்ரேல் ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் எக்ஸ் தளப் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

ஹெஸ்புல்லாவுக்கு நெருக்கமான வட்டாரங்களிலிருந்து கிடைத்த தகவலின்படி, வெள்ளிக்கிழமை முதல் நஸ்ரல்லாவுடனான தொடர்பு துண்டிப்பட்டுவிட்டதாக ஏஎஃப்பி செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. இருந்தபோதிலும், நஸ்ரல்லா கொல்லப்பட்டுவிட்டதாக எதுவும் தெரிவிக்கப்படவில்லை. ஹெஸ்புல்லா ஆயுதக் குழுவிடமிருந்து அதிகாரபூர்வமாக அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை.

முன்னதாக

கடந்தாண்டு அக்டோபர் 7 முதல் இஸ்ரேல் மற்றும் காஸாவிலுள்ள ஹமாஸ் இடையே போர் மூண்டது. இதன் எதிரொலியாக லெபனானிலுள்ள ஹெஸ்புல்லா ஆயுதக் குழு மற்றும் இஸ்ரேல் இடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இஸ்ரேல் மற்றும் லெபனான் எல்லையிலும் தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன. ஹெஸ்புல்லா ஆயுதக் குழு காஸாவுக்கு ஆதரவாகச் செயல்பட்டு வருகிறது. ஹெஸ்புல்லாவுக்கு ஈரானின் ஆதரவு உள்ளது.

இந்தச் சூழலில் தான் லெபனானில் அண்மையில் ஆயிரக்கணக்கான பேஜர்கள் வெடித்தன. இதில் குழந்தை உள்பட 12 பேர் உயிரிழந்தார்கள். பேஜர்கள் வெடித்ததன் பின்னணியில் இஸ்ரேலின் உளவு அமைப்பான மொஸ்ஸாத் இருப்பதாக ஹெஸ்புல்லா குற்றம்சாட்டியது. இதைத் தொடர்ந்து, ஹெஸ்புல்லா ஆயுதக் குழுவினர் பயன்படுத்தும் சிறிய ரக ரேடியோக்கள் மற்றும் வாக்கி டாக்கிகள் அடுத்தடுத்து வெடித்தன. இதில் 20 பேர் உயிரிழந்தார்கள். இரண்டு நாள்களில் அடுத்தடுத்து நடந்த தாக்குதல்கள் மூலம் மொத்தம் 32 பேர் உயிரிழந்தார்கள்.

இதுவே உலக நாடுகள் மத்தியில் கவலையை அதிகரித்த நிலையில், ஹெஸ்புல்லா ஆயுதக் குழுவினரின் இலக்குகளைக் குறிவைத்து இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தத் தொடங்கியது. ஆயுதங்களைப் பதுக்கி வைத்திருக்கும் இடங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் தரப்பில் கூறப்பட்டது.

இந்தத் தாக்குதலில் 500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தார்கள். 2006-க்கு பிறகு ஹெஸ்புல்லா மீது இஸ்ரேல் நடத்திய மிகப் பெரிய தாக்குதல் இது.

இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, லெபனான் நாட்டின் தெற்கு துறைமுக நகரமான சிடோனிலிருந்து பெய்ருட்டுக்கு மக்கள் மிகப் பெரிய அளவில் இடம்பெயரத் தொடங்கினார்கள்.

தாக்குதல் நடத்தப்போகும் பகுதியிலிருந்து வெளியேறுமாறு விடுக்கப்படும் எச்சரிக்கைகளை லெபனான் மக்கள் கவனிக்குமாறு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹு தெரிவித்தார். எங்களுடையத் தாக்குதல் நிறைவடைந்தவுடன், நீங்கள் உங்களுடைய வீடுகளுக்குப் பாதுகாப்பாக திரும்பலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் கூறுகையில், "இஸ்ரேல் - லெபனான் எல்லையிலிருந்து ஹெஸ்புல்லா குழுவினரை வெளியேற்றுவதற்குத் தேவையான உரிய நடவடிக்கைகளை ராணுவம் மேற்கொள்ளும்" என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in