
பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்டு வந்த 9 பயங்கரவாத முகாம்களை கடந்த மே 7-ல் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் மூலம் இந்திய பாதுகாப்புப் படைகள் தாக்கி அழித்தன. இதில் கொல்லப்பட்ட 5 முக்கிய தீவிரவாதிகள் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
ஊடகங்களில் வெளியாகியுள்ள தகவல்களின்படி, ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் நிறுவனர் மசூத் அஸாத்தின் சகோதரர் யூசுஃப் அஸார், ஆபரேஷன் சிந்தூரில் கொல்லப்பட்டுள்ளார். தேடப்படும் தீவிரவாதியான இவர் மீது ஏற்கனவே இன்டர்போல் அமைப்பு சிகப்பு நோட்டீஸ் (A-565/6-2000) பிறப்பித்துள்ளது.
1999 டிசம்பரில் நேபாள தலைநகர் காத்மாண்டுவில் இருந்து இந்திய ஏர்லைன்ஸ் விமானத்தை (IC-814) காந்தஹாருக்கு கடத்தப்பட்ட திட்டத்தை தீட்டியதில் இவர் முக்கியப் பங்காற்றியுள்ளார்.
மேலும், லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பில் முக்கியப் பங்காற்றியா முடாசர் காதியன் காஸ் (எ) அபு ஜுண்டல், பயங்கரவாதி காலித் (எ) அபு ஆகாஷா, ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் பொறுப்பாளர் ஹஃபீஸ் முகமது ஜலீல் மற்றும் தளபதி முகமது ஹசன்கான் ஆகிய நால்வரும் இந்திய பாதுகாப்புப் படைகள் மேற்கொண்ட தாக்குதலில் உயிரிழந்துள்ளனர்.
இந்த தீவிரவாதிகளின் இறுதி சடங்கில் பஞ்சாப் முதல்வர் மரியம் நவாஸ், மாகாண காவல்துறை மற்றும் பாகிஸ்தான் ராணுவ உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் முக்கியமான முகாம்களில் ஒன்றான மர்கஸ் சுபானல்லா, பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில், கடந்த 2015-ல் இருந்து செயல்பட்டு வருகிறது. இது ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தலைமையகமாகவும் கூறப்படுகிறது.
2019 புல்வாமா தாக்குதல் உள்பட பல்வேறு பயங்கரவாத தாக்குதல்கள் இங்குதான் திட்டமிடப்பட்டுள்ளன.