ஃபிரான்ஸ் நாடாளுமன்றத்தைக் கலைத்தார் அதிபர் மாக்ரோன்!

ஐரோப்பிய பாராளுமன்றத் தேர்தலில் ஃபிரான்ஸ் நாட்டின் வலதுசாரி கட்சிகளுக்கு அதிக வாக்குகள் கிடைத்துள்ள நிலையில் இம்மானுவேல் மாக்ரோன் நடவடிக்கை.
ஃபிரான்ஸ் நாடாளுமன்றத்தைக் கலைத்தார் அதிபர் மாக்ரோன்!

ஃபிரான்ஸ் நாடாளுமன்றத்தின் கீழ் அவையைக் கலைக்கப் போவதாக அறிவித்துள்ளார் அந்நாட்டு அதிபர் இம்மானுவேல் மாக்ரோன். ஜூன் 30-ல் முதல் கட்டம், ஜூலை 7-ல் இரண்டாம் கட்டம் என இரண்டு கட்டமாக புதிய உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கத் தேர்தல் நடைபெறும் எனவும் அவர் அறிவிப்பு.

ஐரோப்பிய ஒன்றியத்தின் ஐரோப்பிய பாராளுமன்றத்துக்கான தேர்தலில் ஃபிரான்ஸ் நாட்டின் `தேசிய பேரணி’ தலைமையிலான வலதுசாரிக் கட்சிகளுக்கு 34% வாக்குகள் கிடைத்துள்ளதால், இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இந்தத் தேர்தலில் மாக்ரோனின் `மறுமலர்ச்சி கட்சிக்கு’ 15% வாக்குகள் கிடைத்துள்ளன.

வலதுசாரி கட்சிகளின் இந்த எழுச்சி குறித்து கருத்து தெரிவித்துள்ள மாக்ரோன், `வலதுசாரிக் கட்சிகள் ஐரோப்பிய கண்டம் முழுவதும் வளர்ச்சி பெற்று வருகின்றன. ஜனநாயகத்தின் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது, எனவே முடிவை நான் உங்களிடம் (மக்கள்) விடுகிறேன்’ எனத் தெரிவித்தார்.

`ஐரோப்பிய பாராளுமன்றத்தில் வலதுசாரிகளின் வளர்ச்சியால், ஐரோப்பிய ஒன்றியம் முடக்கப்படும் அபாயம் உள்ளது’ என கடந்த ஜூன் 6-ல் கருத்து தெரிவித்திருந்தார் மாக்ரோன்.

2022-ல் பிரான்ஸ் நாடாளுமன்றத்தின் கீழ் அவைக்கு நடந்த தேர்தலில், மாக்ரோனின் `மறுமலர்ச்சி கட்சிக்கு’ அறுதிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. `தேசிய பேரணி கட்சி’ தலைமையிலான எதிர்க்கட்சிகள் ஃபிரான்ஸ் நாடாளுமன்றத்தின் கீழ் அவையில் பெரும்பான்மை பலத்துடன் உள்ளன. ஆனால் ஃபிரான்ஸ் நாட்டின் அதிபர் மக்களால் நேரடியாகத் தேர்தெடுக்கப்படுவதால் அவரது பதவிக்கு எந்த பாதிப்பும் இல்லை.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in