
அமெரிக்காவில் நியூயார்க் நகரை ஒட்டி அமைந்துள்ள ஹட்சன் ஆற்றில் ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளானதில், பிரபல நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி உட்பட அவரது குடும்பத்தினர் உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்க நேரப்படி நேற்றைய தினம் (ஏப்.10) பிற்பகல் 2.59 மணியளவில் நியூயார்க் நகரில் அமைந்துள்ள மான்ஹாட்டன் ஹெலிபேடில் இருந்து கிளம்பி, சுற்றுலா ஹெலிகாப்டர் ஒன்று வானில் பறக்கத் தொடங்கியது.
ஹட்சன் நதியின் வடக்கே அமைந்துள்ள ஜார்ஜ் வாஷிங்டன் பாலத்திற்கு அருகில் வரை சென்ற அந்த ஹெலிகாப்டர், அதன்பிறகு தெற்கு நோக்கித் திரும்பி நியூ ஜெர்சி கடற்கரை அருகே பறந்துகொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக திடீரென ஆற்றில் விழுந்து நொறுங்கியது. இதைத் தொடர்ந்து, கீழ் மன்ஹாட்டன் அருகே அந்த ஹெலிகாப்டர் நீரில் மூழ்கியது.
இந்த விபத்தில், ஹெலிகாப்டரின் ஒட்டுனர் உட்பட அதில் இருந்த 6 பேரும் உயிரிழந்ததாக முதலில் தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர், சீமென்ஸ் நிறுவனத்தின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரான ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த அகஸ்டின் எஸ்கோபார் இந்த விபத்தில் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.
ஜெர்மனியை தலையிடமாகக் கொண்டு செயல்பட்டுவரும் பிரபல பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனமான சீமென்ஸின் ஸ்பெயின் நாட்டுப் பிரிவின் தலைமை செயல் அதிகாரியாக அகஸ்டின் எஸ்கோபார் செயல்பட்டு வருகிறார். இந்த விபத்தில், அவருடன் அவரது மனைவியும், மூன்று குழந்தைகளும் உயிரிழந்துள்ளதாக நியூயார்க் நகர மேயர் எரிக் ஆடம்ஸ் அறிவித்துள்ளார்.
ஒட்டுமொத்தமாக, 18 நிமிடங்கள் வரை ஹெலிகாப்டர் பறந்துகொண்டிருந்ததாகவும், விபத்துக்கான காரணத்தைக் கண்டறியும் பணி தொடங்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.