
பஹல்காம் தீவிரவாத தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தான் உடனான சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்திவைக்க மத்திய அரசு முடிவுசெய்துள்ளதைக் கண்டித்துள்ள அந்நாட்டு அரசு, `தண்ணீர் யுத்தத்தில்’ இந்தியா ஈடுபடுவதாக குற்றம்சாட்டியுள்ளது.
அத்துடன், உலக வங்கி போன்ற சர்வதேச அமைப்பை உள்ளடக்கிய ஒரு ஒப்பந்தத்தில் இருந்து இந்திய ஒரு தலைப்பட்சமாக வெளியேற முடியாது என்றும் பாகிஸ்தான் கூறியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக, பாகிஸ்தான் எரிசக்தி அமைச்சர் அவைஸ் லெக்ஹாரி தன் எக்ஸ் கணக்கில் வெளியிட்ட பதிவில் கூறியதாவது,
`பொறுப்பற்ற முறையில் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தி வைத்தது தண்ணீர் யுத்தமாகும்; ஒரு கோழைத்தனமான, சட்டவிரோத நடவடிக்கையாகும். ஒவ்வொரு சொட்டிலும் எங்களுக்கு உரிமை உள்ளது, அதை நாங்கள் சட்டப்பூர்வமாகவும், அரசியல்ரீதியாகவும், உலகளாவிய முறையிலும் முழு பலத்துடன் பாதுகாப்போம்’ என்றார்.
பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கைகள் தொடர்பான ஆலோசனையை மேற்கொள்ள அந்நாட்டின் உச்சபட்ச பாதுகாப்பு அமைப்பான தேசிய பாதுகாப்பு குழுவின் (NSC) கூட்டம் நடைபெற்றது. இந்நிலையில், இந்தியாவின் நடவடிக்கைக்கு எதிராக பாகிஸ்தான் அமைச்சர் பொதுவெளியில் தற்போது எதிர்வினையாற்றியுள்ளார்.
சிந்து மற்றும் அதன் கிளை நதிகளான ஜீலம், செனாப், ராவி, சட்லெஜ் ஆகியவை இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்குள் பாய்ந்தோடுகின்றன. உலக வங்கி மத்தியஸ்தம் மேற்கொண்டதன் அடிப்படையில், நதீநீர் பங்கீடு தொடர்பாக இந்தியா, பாகிஸ்தானுக்கு இடையே 1960-ல் ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த ஒப்பந்தத்தின்படி சிந்து, ஜீலம் மற்றும் செனாப் நதிகளின் பெரும்பகுதி நீர் பாகிஸ்தானுக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது. வேளாண்மை, குடிநீர் எனப் பல்வேறு அத்தியாவசியத் தேவைகளுக்கும் இந்த நதிகளின் நீரையே பாகிஸ்தான் சார்ந்து இருக்கிறது.