
பழிக்குப்பழி தாக்குதல்கள் நிறைவடைந்துள்ளதால், இந்தியாவும், பாகிஸ்தானும் இத்துடன் தாக்குதல்களை நிறுத்திக்கொள்வார்கள் என்று நம்புவதாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கருத்து தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் அலுவலகமான வெள்ளை மாளிகையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், பாகிஸ்தானில் இந்தியா மேற்கொண்ட தாக்குதல்கள் குறித்து அதிபர் டிரம்ப் பேசியதாவது,
`இதில் என்னுடைய நிலைப்பாடு என்னவென்றால், இரு தரப்புடனும் நான் நன்றாகப் பழகுவேன், இரு நாடுகளையும் நன்கு அறிவேன், பிரச்னைகளை அவர்கள் சரிசெய்துகொள்வதையும், தாக்குதல்களை நிறுத்திக்கொள்வதையும் நான் பார்க்க விரும்புகிறேன். இத்துடன் அவர்கள் நிறுத்திக்கொள்ளலாம்.
பழிக்குப்பழி தாக்குதல்களை அவர்கள் நடத்திவிட்டதால், இதை நிறுத்தக்கொள்வார்கள் என்று நம்புகிறேன். இரு நாடுகளுடனும் எங்களுக்கு நல்ல நெருக்கம் உள்ளது; இரு தரப்பினருடனும் நல்லுறவைப் பேணுகிறோம். உதவி ஏதும் தேவைப்பட்டால் அதற்கு நான் தயாராக இருக்கிறேன்’ என்றார்.
முன்னதாக, ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக வெளியுலகிற்கு இந்தியா அறிவித்த சிறிது நேரம் கழித்து, செய்தியாளர்கள் சந்திப்பை நடத்திய டிரம்ப், `இது மிக விரைவாக முடிவடையும்’ என்று நம்புவதாக கூறினார்.
அவர் கூறியதாவது, `ஓவல் அலுவலகத்தின் கதவிற்கு அருகே நாங்கள் நடந்துவந்தபோதுதான் அது குறித்து (இந்திய தாக்குதல்) கேள்விப்பட்டோம். முன்பு நடைபெற்ற விஷயங்களை வைத்துப் பார்க்கும்போது, அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பது பலருக்கும் தெரிந்திருக்கும். நீண்ட காலமாக அவர்கள் சண்டையிட்டு வருகின்றனர். இது மிக விரைவாக முடிவடையும் என்று நம்புகிறேன்’ என்றார்.