
அமெரிக்கா மற்றும் பிரிட்டன் உள்ளிட்ட மேற்குலக நாடுகளுக்காக பயங்கரவாத அமைப்புகளுக்கு 30 ஆண்டுகளாக அடைக்கலம் அளித்து வருவதாக பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிஃப் தெரிவித்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் உள்ளூர்வாசி ஒருவர் உள்பட 26 பேர் உயிரிழந்தார்கள். சுற்றுலாப் பயணிகளைக் குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பயங்கரவாதிகளின் இந்தத் தாக்குதலுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்து கடுமையான பதிலடி தரப்படும் என எச்சரித்துள்ளது. உலக நாடுகளும் இதற்குக் கடும் கண்டனங்களைப் பதிவு செய்துள்ளன.
பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகளால் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ள நிலையில், சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து உள்பட 5 முக்கிய முடிவுகளை இந்தியா எடுத்துள்ளது. பாகிஸ்தானியர்களுக்கு விசா வழங்கப்படாது என்றும் இந்தியாவிலுள்ள பாகிஸ்தானியர்கள் வெளியேற வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால், இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
இந்நிலையில், 30 ஆண்டுகளாக பயங்கரவாத அமைப்புகளுக்கு அடைக்கலம் அளித்து வருவதை பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிஃப் ஒப்புக்கொண்டுள்ளார். ஸ்கை நியூஸுக்கு அளித்த பேட்டியில் கவாஜா ஆசிஃப் இதனைத் தெரிவித்துள்ளார்.
"பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவு கொடுத்து பயிற்சியளித்து நிதியுதவி அளிக்கும் நீண்ட வரலாறை பாகிஸ்தான் கொண்டிருப்பதை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்களா" என்று கேள்வியெழுப்பப்பட்டது.
இதற்குப் பதிலளித்த பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிஃப், "அமெரிக்காவுக்காகவும் பிரிட்டன் உள்ளிட்ட மேற்குலக நாடுகளுக்காகவும் இந்த மோசமான செயலைக் கடந்த 30 ஆண்டுகளாகச் செய்து வருகிறோம்" என்றார்.
இதுதான் உங்கள் தரப்பு வாதமா என்று அடுத்த கேள்வி கேட்கப்பட்டது. இதற்குப் பதிலளித்த அவர், "இல்லை, இது தவறு. இதனால், நாங்கள் பாதிக்கப்பட்டிருக்கிறோம். அதனால்தான் இதை நீங்கள் இதை என்னிடம் சொல்கிறீர்கள். சோவியத் யூனியனுக்கு எதிரானப் போரில் நாங்கள் இணையாமல் இருந்திருந்தால்... பிறகு 9/11-க்கு பிந்தைய போரில் நாங்கள் இணையாமல் இருந்திருந்தால், பாகிஸ்தானின் வரலாறு என்பது குற்றச்சாட்டுக்கு அப்பாற்பட்ட வரலாறாக இருந்திருக்கும்" என்றார் பாகிஸ்தான் அமைச்சர் கவாஜா ஆசிஃப்.