ஸ்லோவாகியா பிரதமர் ராபர்ட் ஃபிகோ மீது துப்பாக்கிச் சூடு

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் கண்டனம்.
ஸ்லோவாகியா பிரதமர் ராபர்ட் ஃபிகோ மீது துப்பாக்கிச் சூடு
1 min read

ஸ்லோவாகியா நாட்டில் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்ற அந்த நாட்டு பிரதமர் ராபர்ட் ஃபிகோ மீது அடையாளம் தெரியாத நபர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.

அரசு நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு நிகழ்விடத்துக்கு வெளியே தனது ஆதரவாளர்கள் மத்தியில் பேசிக்கொண்டிருந்தபோது, ஃபிகோ பலமுறை சுடப்பட்டுள்ளார். இதில் நிலைதடுமாறி அவர் கீழே விழுந்தார்.

துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பிரதமர் ஃபிகோவைத் துப்பாக்கியால் சுட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தத் துப்பாக்கிச் சூட்டுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். ஸ்லோவாகியா பிரதமர் ராபர்ட் ஃபிகோ துப்பாக்கிச் சூடு சம்பவம் மிகுந்த அதிர்ச்சியளிப்பதாக எக்ஸ் தளப் பக்கத்தில் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

இந்த கோழைத்தனமான செயலைக் கடுமையாகக் கண்டிப்பதாகவும், பிரதமர் ஃபிகோ விரைவில் குணமடைய வேண்டி வாழ்த்துவதாகவும் பிரதமர் மோடி தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். மேலும் ஸ்லோவாக் குடியரசு மக்களுடன் இந்தியா துணை நிற்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்கும், துப்பாக்கிச் சூடு சம்பவம் அதிர்ச்சியளிப்பதாகக் குறிப்பிட்டார்.

logo
Kizhakku News
kizhakkunews.in