
பாகிஸ்தானில் செயல்பட்டு வந்த பயங்கரவாத முகாம்களை தாக்கி அழித்த இந்திய பாதுகாப்புப் படைகளின் நடவடிக்கைகளுக்கு சீனா கவலை தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களை ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய பாதுகாப்புப் படைகள் தாக்கி அழித்தன.
இது தொடர்பாக சீன தலைநகர் பெய்ஜிங்கில் உள்ள அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் இன்று (மே 7) வெளியிட்ட அறிக்கையில்,
"இன்று காலை நடைபெற்ற இந்திய இராணுவத்தின் செயல்பாடுகள் குறித்து சீனா தன் கவலையை வெளிப்படுத்துகிறது; இந்த விவகாரம் தொடர்பான தற்போதைய நடவடிக்கைகளை கவனத்தில் கொண்டுள்ளது. இந்தியாவும் பாகிஸ்தானும் எப்போதும் அண்டை நாடுகளாகவே இருக்கும். அதிலும் அவர்கள் இருவரும் சீனாவின் அண்டை நாடுகள்.
பயங்கரவாதத்தின் அனைத்துவித வடிவங்களையும் சீனா எதிர்க்கிறது. இந்தியாவும் பாகிஸ்தானும் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு முன்னுரிமை அளிக்குமாறும், அமைதியுடன் நிதானமாக இருக்குமாறும், நிலைமையை மேலும் சிக்கலாக்கும் நடவடிக்கைகளைத் தவிர்க்குமாறும் நாங்கள் அறிவுறுத்துகிறோம்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று காலை பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் இஷக் தாருடன், சீன தூதர் ஜியாங் ஸெய்டாங் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இது தொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில்,
`பாகிஸ்தானின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை எந்த விலைகொடுத்தும் பாதுகாக்க உறுதியாக உள்ளதை அவர் (இஷக் தார்) அடிக்கோடிட்டார். பிராந்தியத்தின் பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகள் குறித்து இரு தரப்பினரும் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டதோடு, சம்மந்தப்பட்ட அனைத்து விவகாரங்களிலும் ஒருங்கிணைப்பை மேற்கொள்ளவும், தகவல்தொடர்புகளைப் பகிர்ந்துகொள்ளவும் ஒப்புக்கொண்டனர்’ என்று கூறப்பட்டுள்ளது.