
ஆப்கானிஸ்தானின் பாக்ராம் விமானப் படைத் தளத்தை சீனா ஆக்கிரமித்துள்ளது வருத்தமளிப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானிலுள்ள மிகப் பெரிய விமானப் படைத் தளம் பாக்ராம் விமானப் படைத் தளம். 2021 ஜூலையில் இந்த விமானப் படைத் தளத்தைவிட்டு வெளியேறியது அமெரிக்கா. இந்த விமானப் படைத் தளத்தை தற்போது சீனா ஆக்கிரமித்துவிட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கவலை தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் டொனால்ட் டிரம்ப் பேசியதாவது:
"பாக்ராம் விமானப் படைத் தளத்திலிருந்து ஒரு மணி நேரம் தொலைவில் சீனா தனது அணு ஆயுதத்தைத் தயாரித்து வருகிறது. சீனா தனது அணு ஆயுத ஏவுகணையைத் தயாரிக்கிறது. பாக்ராமிலிருந்து ஒரு மணி நேர தொலைவு தான். எனவே, பாக்ராமைக் கைவிடக் கூடாது என்றேன்.
ஆனால், பாக்ராமைக் கைவிட்டார்கள். தற்போது பாக்ராமை சீனா ஆக்கிரமித்துள்ளது. இது வருத்தமானது. இந்த விமானப் படைத் தளம் உலகின் மிகப் பெரிய விமானப் படைத் தளங்களில் ஒன்று. வலிமையான மிக நீண்ட ஓடுதளங்களைக் கொண்டுள்ளது. சீனா அணு ஆயுத ஏவுகணையைத் தயாரிக்கும் இடத்திலிருந்து ஒரு மணி நேரம் தொலைவு தான்" என்றார் டிரம்ப்.
மேலும், ஜோ பைடன் ஆட்சிக் காலத்தில் ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படைகளைத் திரும்பப் பெற்றது குறித்தும் டிரம்ப் விமர்சித்துள்ளார். "ஆப்கானிஸ்தானிலிருந்து படைகளைத் திரும்பப் பெற்றது மட்டுமல்ல. படைகளைத் திரும்பப் பெற்ற விதம் முக்கியம். அமெரிக்க வரலாற்றில் மிகவும் தலைகுனிவான தருணம் அது" என்றார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்.