

வங்கதேச மாணவக் கலவரத்தில் இந்து இளைஞர் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனூஸ் தெரிவித்துள்ளார்.
வங்கதேசத்தில் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக மாணவ அமைப்பினர் கடந்த ஆண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் எதிரொலியாக பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ளார். அதற்குப் பிறகு பொறுப்பேற்ற முகமது யூனூஸ் தலைமையிலான இடைக்கால அரசு, ஷேக் ஹசீனா மீது பல்வேறு வழக்குகள் தொடர்ந்தது. அதில் மாணவர் போராட்டத்தின்போது மனிதாபிமானத்திற்கு எதிராக துப்பாக்கிச் சூட்டுக்கு ஆணையிட்ட விவகாரத்தில், ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதித்து, அந்நாட்டு சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் ஆணையிட்டுள்ளது.
இதனை நிறைவேற்றுவதற்காக அவரைத் தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று வங்கதேச வெளியுறவுத் துறை இந்தியாவைக் கேட்டுக்கொண்டிருக்கிறது. மேலும் இண்டர்போல் துறையின் உதவியையும் நாடியிருக்கிறது.
இதற்கிடையில், மாணவர் போராட்டத்தில் அமைப்பை வழிநடத்திய சமூக செயற்பாட்டாளர் ஷெரீப் உஸ்மான் ஹாடி, கடந்த டிசம்பர் 12 அன்று அடையாளம் தெரியாத நபர்களால் சுடப்பட்டார். இது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், அவர் உயர் சிகிச்சைக்காக சிங்கப்பூரில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவர் கடந்த டிசம்பர் 18 அன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் கொதிப்படைந்த மாணவ அமைப்பினர் வங்கதேசத்தில் கலவரத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.
‘புரோதோம் அலோ’, ‘டெய்லி ஸ்டார்’ ஆகிய நாளிதழ் அலுவலகங்கள் தீவைத்துக் கொளுத்தப்பட்டன. சட்டேகிராம் பகுதியில் உள்ள இந்திய துணைத் தூதரக அலுவலகம் மற்றும் இந்திய துணை தூதரின் வீடு மீது சிலர் கல்வீசி தாக்கினர்.
இந்தியாவுக்கு எதிராகவும், அவாமி லீக் மற்றும் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராகவும் கோஷம் எழுப்பினர். இதற்கிடையில் கடந்த 18 அன்று இரவு, மைமன்சிங் மாவட்டத்தின் பலுகா பகுதியில், இந்தியாவைச் சேர்ந்த 30 வயது இந்து இளைஞர் தீபு சந்திர தாஸ் என்பவரைக் கலவரக்காரர்கள் அடித்துக் கொலை செய்து, உடலை எரித்துள்ளனர். இச்சம்பவம் வங்கதேசத்தில் சிறுபான்மையினராக இருக்கும் இந்துக்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இச்சம்பவத்தில் தொடர்புள்ளதாக ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக வங்கதேசத்தின் இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனூஸ் தெரிவித்துள்ளார். மைமென்சிங்கில் நடந்த படுகொலையில் தொடர்புள்ள 19 வயதுள்ள இளைஞர்கள் இருவர் உட்பட ஏழு பேரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளார்கள்.
இதற்கிடையே, ஹாடி உடல் நேற்று (டிச. 19) மாலை சிங்கப்பூரில் இருந்து டாக்கா கொண்டு வரப்பட்டது. இறுதிச் சடங்கு இன்று நடைபெறுகிறது. வங்கேதசத்தில் இந்தியாவுக்கு எதிராக போராட்டங்கள் வெடித்துள்ள நிலையில், தில்லியில் உள்ள வங்கதேச தூதரகத்துக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
Chief Adviser of the Government of Bangladesh Muhammad Yunus has announced that seven people have been arrested in connection with the beating and murder of a Hindu youth during student riots.