
65 வயது வைர வியாபாரியான மெஹுல் சோக்ஸி, பஞ்சாப் நேஷனல் வங்கியின் ரூ. 13,850 கோடி முறைகேடு வழக்கில் கடந்த 2018 ஜனவரியில் நாட்டைவிட்டு தப்பியோடினார். சிபிஐ மற்றும் அமலாக்கத் துறையால் இவர் தேடப்பட்டு வருகிறார். ஆண்டிகுவா தீவில் தஞ்சமடைந்த சோக்ஸி, கடந்தாண்டு பெல்ஜியத்துக்கு இடம்பெயர்ந்தார். இவர் ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. சிகிச்சைக்காகவே அவர் கடந்தாண்டு பெல்ஜியம் சென்றார்.
இவரைக் கைது செய்து நாடு கடத்த இந்தியா சார்பில் தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பெல்ஜியத்திடமும் மெஹுல் சோக்ஸியைக் கைது செய்ய இந்தியா தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டதாகத் தெரிகிறது. இதன் அடிப்படையில் அவர் பெல்ஜியத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். மெஹுல் சோக்ஸியை இந்தியாவிடம் ஒப்படைப்பது குறித்து இந்தியா தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டதாகவும் பெல்ஜியம் தரப்பில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் மெஹுல் சோக்ஸி கடந்த ஏப்ரல் 12 அன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
சோக்ஸி தரப்பு வழக்கறிஞர் விஜய் அகர்வால் கூறுகையில், இரு காரணங்களின் அடிப்படையில் கைது நடவடிக்கையை எதிர்த்து பிணை கோரி மேல்முறையீடு செய்யவுள்ளதாகக் கூறினார். சோக்ஸியின் உடல்நிலைக்கு இந்தியாவில் உரிய சிகிச்சை கிடைக்குமா என்கிற கவலை இருப்பதாகச் சொல்லி முறையிடப்படும் என்றார். உரிய சிகிச்சை கிடைக்காமல் போனால், அவருக்கான மனித உரிமைகள் கடுமையாகப் பாதிக்கப்படும் என்றார் வழக்கறிஞர் விஜய் அகர்வால். பெல்ஜியத்தில் இந்த வழக்கு விசாரணை 5 நாள்களுக்குப் பிறகே வரும் என்பதால், அப்போதுதான் மனு தாக்கல் செய்யப்படும் எனத் தெரிகிறது.
மெஹுல் சோக்ஸி ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இவர் இன்னும் தப்பியோடியப் பொருளாதாரக் குற்றவாளி என்று அறிவிக்கப்படவில்லை.