15 வருடங்களில் முதல்முறையாக பாகிஸ்தான் அரசுடன் வங்கதேச அரசு பேச்சுவார்த்தை!

மேற்கு பாகிஸ்தான் ராணுவத்தால் 30 லட்சம் வங்காளிகள் கொல்லப்பட்டதாகவும், ஆயிரக்கணக்கான பெண்கள் பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளானதாகவும் கூறப்படுகிறது.
15 வருடங்களில் முதல்முறையாக பாகிஸ்தான் அரசுடன் வங்கதேச அரசு பேச்சுவார்த்தை!
1 min read

15 வருடங்களுக்கு பிறகு முதல்முறையாக பாகிஸ்தான் அரசு அதிகாரிகளும் வங்கதேச அரசு அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். 1971 போரில் பாகிஸ்தான் ராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட அட்டூழியங்களுக்கு மன்னிப்புக்கோரவேண்டும் என்று இந்த பேச்சுவார்த்தையில் வங்கதேச அரசு வலியுறுத்தியுள்ளது.

வங்கதேசப் பிரதமராக ஷேக் ஹசினா இருந்தபோது, பாகிஸ்தானுடனான அரசுரீதியிலான உறவுகளில் பிணக்கம் ஏற்பட்டது. இந்நிலையில், முஹமது யூனுஸ் தலைமையிலான வங்கதேச இடைக்கால அரசு, பாகிஸ்தான் அரசுடனான உறவுகளைப் புதுப்பிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.

இதன் ஒரு பகுதியாக, 15 வருடங்களில் முதல்முறையாக, இருநாட்டு வெளியுறவு அதிகாரிகளும் வங்கதேச தலைநகர் டாக்காவில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

பாகிஸ்தான் வெளியுறவு செயலர் அம்னா பலோச் தலைமையிலான அதிகாரிகள் குழுவும், வங்கதேச வெளியுறவு செயலர் முஹமது ஜாஷிம் உதின் தலைமையிலான அதிகாரிகள் குழுவும் மேற்கொண்ட இந்த பேச்சுவார்த்தையில் 1971 விடுதலைப் போர் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.

அன்றைய கிழக்கு பாகிஸ்தானாக இருந்த பகுதியில் மார்ச் 1971 அன்று நடந்த விடுதலைப் போரைத் தொடர்ந்து, அது வங்கதேசம் என்ற பெயரில் சுதந்திர நாடானது. இந்த போரின்போது மேற்கு பாகிஸ்தான் ராணுவத்தால் 30 லட்சம் வங்காளிகள் கொல்லப்பட்டதாகவும், ஆயிரக்கணக்கான பெண்கள் பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளானதாகவும் கூறப்படுகிறது.

மேற்கு பாகிஸ்தான் ராணுவத்தால் நடத்தப்பட்ட அட்டூழியங்கள், இரு நாடுகளுக்கு இடையே பதட்டத்தை ஏற்படுத்தும் விஷயமாக இன்றுவரை இருந்து வருகிறது. இந்நிலையில், 1971 சம்பவத்திற்காக, பாகிஸ்தான் அரசு பொதுவெளியில் மன்னிப்புக் கேட்கவேண்டும் என்று வங்கதேச அரசு வலியுறுத்தியுள்ளது.

அத்துடன், இரு நாடுகளுக்கும் பொதுவான சொத்துகளில் இருந்து தங்கள் நாட்டிற்குச் சேரவேண்டிய பங்கான 4.52 பில்லியன் டாலர்களை பாகிஸ்தான் வழங்கவேண்டும் என்றும் வங்கதேச அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in