
தேச துரோக வழக்கில் இஸ்கான் அமைப்பைச் சேர்ந்த பிரபல துறவி சின்மொய் கிருஷ்ண தாஸுக்கு வங்கதேச உயர் நீதிமன்றம் ஜாமின் வழங்கியது.
அகில உலக கிருஷ்ண பக்திக் கழகம் என்று அறியப்படும் இஸ்கான் அமைப்பைச் சேர்ந்தவர் பிரபல துறவி சின்மொய் கிருஷ்ண தாஸ் பிரம்மச்சாரி. வங்கதேசத்தை பூர்வீகமாகக் கொண்ட கிருஷ்ண தாஸ் சிட்டகாங் மாவட்டத்தில் அமைந்துள்ள புன்டரிக் தம் மடத்தின் தலைவராகவும் உள்ளார்.
கடந்தாண்டு அக்டோபரில் நடந்த ஒரு பேரணியின்போது வங்கதேசத்தின் தேசியக்கொடியை அவமதித்த காரணத்திற்காக அந்நாட்டு காவல்துறையால் கிருஷ்ண தாஸ் கைது செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து தேசத்துரோக வழக்குப் பதியப்பட்டு அவர் சிறையிலடைக்கப்பட்டார்.
வங்கதேச இடைக்கால அரசின் இந்த நடவடிக்கைக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் கண்டனம் தெரிவித்திருந்தது. இதை கண்டித்து சில அமைப்புகள் மேற்கு வங்க மாநிலத்தில் போராட்டம் நடத்தின.
சிட்டகாங்கில் உள்ள கீழமை நீதிமன்றத்தில் கடந்த ஜனவரி 2 அன்று கிருஷ்ண தாஸுன் ஜாமின் மனு மீது விசாரணை நடந்தது. பெற்ற தாயைவிட தாய்நாடு மீது கிருஷ்ண தாஸுக்குப் பற்றுதல் இருப்பதாகவும், அவர் துரோகி அல்ல எனவும் சிட்டகாங் நீதிமன்றத்தில் அவரது தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் வாதிட்டனர். இருந்தும் அவருக்கு ஜாமின் மறுக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, ஜாமின் கோரி வங்கதேச உயர் நீதிமன்றத்தில் அவர் சார்பில் வழக்குத் தொடரப்பட்டது. ஜாமின் மனு மீதான விசாரணையின்போது, எதனால் கிருஷ்ண தாஸுக்கு ஜாமின் வழங்கக்கூடாது என்பது குறித்து பதிலளிக்குமாறு வங்கதேச இடைக்கால அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
இது தொடர்பாக, அவரது வழக்கறிஞர் அபூர்வா குமார் பட்டாச்சார்ஜி அப்போது ஏஎன்ஐ செய்தி ஊடகத்திற்குப் பேட்டியளித்திருந்தார். இந்நிலையில், தற்போது கிருஷ்ண தாஸுக்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.