
ஆப்கானிஸ்தான் மீது இந்தியா ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக பாகிஸ்தான் குற்றம்சாட்டிய நிலையில், தலிபான் அரசு இதை மறுத்துள்ளது.
ஆபரேஷன் சிந்தூரை தொடர்ந்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான போர் பதற்றம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. மே 8 மற்றும் மே 9 அன்று இரவில் பாகிஸ்தான் அத்துமீறி தீவிர தாக்குதலை நடத்தியது. ஜம்மு-காஷ்மீர் மட்டுமில்லாமல் ராஜஸ்தான், குஜராத், பஞ்சாப் ஆகிய மேற்குப் பகுதியிலுள்ள மாநிலங்களிலும் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வருகிறது. அந்நாட்டின் ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதலை இந்தியப் படைகள் தாக்கி அழித்து வருகின்றன. இதையும் மீறி பஞ்சாபில் குடியிருப்புப் பகுதியில் நடந்த தாக்குதலில் 3 பேர் காயமடைந்தார்கள். ஜம்மு-காஷ்மீரில் அரசு அதிகாரி ஒருவர் உயிரிழந்தார்.
இந்திய படைத் தளங்களை பாகிஸ்தான் குறிவைக்கத் தொடங்கியதை அடுத்து, இந்தியாவும் பாகிஸ்தானிலுள்ள ராணுவப் படைகளைக் குறிவைக்கத் தொடங்கியது.
இவற்றுக்கு மத்தியில் ஆப்கானிஸ்தானில் இந்தியா தாக்குதல் நடத்தியதாக பாகிஸ்தான் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது. இதற்கு மத்திய வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி இன்று காலை விளக்கமளித்தார்.
"இந்தியா ஆப்கானிஸ்தானைத் தாக்கியுள்ளது என்பது முற்றிலும் அபத்தமான குற்றச்சாட்டு. கடந்த ஒன்றரை ஆண்டுகளில் பல முறை ஆப்கானிஸ்தானில் உள்ள பொதுமக்கள் மற்றும் அவர்களுடைய உள்கட்டமைப்பைக் குறிவைத்து தாக்குதல் நடத்திய நாடு எது என்பதை ஆப்கானிஸ்தான் மக்களுக்கு நினைவூட்ட வேண்டிய அவசியமில்லை" என்றார் விக்ரம் மிஸ்ரி.
இந்நிலையில், பாகிஸ்தானின் குற்றச்சாட்டை தலிபான் அரசும் மறுத்துள்ளது. ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இனாயத்துல்லாஹ் கவாரிஸ்மி கூறுகையில், "இது மாதிரியான குற்றச்சாட்டில் (பாகிஸ்தான் குற்றச்சாட்டில்) எந்த உண்மையும் இல்லை" என்றார்.