
இந்தியாவில் யூடியூப் சேனல் நடத்தும் பயனர்களுக்கு கடந்த 3 ஆண்டுகளில் ரூ. 21 ஆயிரம் கோடி அளிக்கப்பட்டுள்ளதாக யூடியூப் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி நீல் மோகன் தெரிவித்துள்ளார்.
உலக ஆடியோ விஷ்வல் மற்றும் என்டர்டெயின்மென்ட் உச்சி மாநாடு (வேவ்ஸ்) மும்பையில் நடைபெற்றது. ஜியோ வோர்ல்ட் சென்டரில் நடைபெற்ற இந்த உச்சி மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார். இதில் கலந்துகொண்ட யூடியூப் தலைமைச் செயல் அதிகாரி நீல் மோகன் பல்வேறு தரவுகளை முன்வைத்தார்.
"கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் இந்தியா முழுக்க உள்ள கிரியேட்டர்ஸ், கலைஞர்கள் மற்றும் ஊடக நிறுவனங்களுக்கு நாங்கள் ரூ. 21 ஆயிரம் கோடி கொடுத்துள்ளோம். இந்தியாவிலுள்ள கிரியேட்டர்ஸ், கலைஞர்கள் மற்றும் ஊடக நிறுவனங்களின் வளர்ச்சியை ஊக்கப்படுத்த, அடுத்த இரு ஆண்டுகளில் ரூ. 850 கோடியை முதலீடு செய்யவுள்ளோம். இவை வெறும் எண்ணிக்கை மட்டுமல்ல. துடிப்புமிக்க இந்தியாவில் எண்ணற்ற தொழில் பாதைகளை உருவாக்கும் உறுதியான தாக்கத்தை வெளிப்படுத்துகிறது.
கடந்தாண்டில் இந்தியாவில் 10 கோடி சேனல்களிலிருந்து காணொளிகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இவற்றில் 15 ஆயிரம் சேனல்கள் 1 மில்லியன் சப்ஸ்கிரைபர்களை கொண்டுள்ளது. சில மாதங்களுக்கு முன்பு இவை 11 ஆயிரம் சேனல்கள் என்ற எண்ணிக்கையிலேயே இருந்தன.
உலகளவில் எந்தவொரு அரசுத் தலைவருக்கும் இல்லாத வகையில் 25 மில்லியன்ஸ் சப்ஸ்கிரைபர்களை கொண்டுள்ள ஒரு தலைவராக பிரதமர் நரேந்திர மோடி இருக்கிறார்" என்றார் நீல் மோகன்.
இந்தியாவை கன்டென்ட் உருவாக்கும் நாடாகக் கருதுகிறார் நீல் மோகன்.