
உலகளவில் மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் பயனர்கள் 'Blue Screen of Death' எனும் சிக்கலை எதிர்கொண்டு வருகிறார்கள்.
மடிக்கணினி, லேப்டாப் உள்ளிட்டவற்றில் விண்டோஸை பயன்படுத்துபவர்கள் இந்த சிக்கலால் அவதிக்குள்ளாகியிருக்கிறார்கள். இதன் காரணமாக உலகம் முழுக்க தகவல் தொழில்நுட்ப சேவை, பொருளாதாரம், தொலைத்தொடர்பு, பொதுச் சேவைகள் பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ளன.
சமீபத்திய அப்டேட்டால் இந்த சிக்கல் ஏற்பட்டுள்ளது என மைக்ரோசாஃப்ட் விளக்கமளித்துள்ளது. இதைச் சரிசெய்யும் பணியில் அந்த நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.
குறிப்பாக விமான சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. ஸ்பைஸ்ஜெட், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், அகாசா ஏர்லைன்ஸ் என இந்திய ஏர்லைன் நிறுவன விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் அறிவித்துள்ளன. தகவல் தொடர்பு மையத்தில் ஏராளமானோர் திரண்டிருப்பதால், 24 மணி நேரத்தில் பயணம் மேற்கொள்பவர்களாக இருந்தால் மட்டுமே தங்களைத் தொடர்புகொள்ளவும் என இண்டிகோ நிறுவனம் அறிவித்திருக்கிறது.
தொழில் நிறுவனங்களில் விண்டோஸ் பயன்பாடு அதிகளவில் இருப்பதால், இங்கும் பாதிப்பானது அதிகளவில் ஏற்பட்டுள்ளது.
விண்டோஸை சார்ந்துள்ள வங்கிச் சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. தென்னாப்பிரிக்காவின் மிகப் பெரிய வங்கியான கேபிடெக்கும் இதனால் பாதிப்பைச் சந்தித்துள்ளது.
இந்தியா மட்டுமின்றி, உலகளவிலும் காரணமாக விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. விமான நிலையங்களில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கிறார்கள். தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, ஜெர்மனியின் பெர்லினில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தில் பயணிகளின் செக்-இன் நடைமுறை பாதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் அவசர அழைப்புக்கான சேவையும் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. லண்டன் பங்குச் சந்தை சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகச் செய்திகள் வந்துள்ளன.