
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் முழுமையாக மேற்கொள்ள முடியாத மனிதப் பணிகள் குறித்து பட்டியலிட்டு விளக்கமளித்துள்ளார் மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ்.
ஓபன் ஏஐ நிறுவனத்தால் கடந்த 2022-ல் சாட் ஜிபிடி என்ற ஏஐ சாட் பாட் அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து மனிதர்களின் சிந்தனை மற்றும் செயல்பாடுகளில் பெரும் மாற்றம் ஏற்பட்டது. ஜெமினி, கோபைலட், டீப்சீக் மற்றும் ஏனைய பிற சாட் பாட்களை வேலை தொடர்பான பணிகளில் ஈடுபடுத்தும் நபர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
அதே நேரம், பல்வேறு துறைகளைச் சேர்ந்த பெரும்பாலான வேலைவாய்ப்புகளை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மாற்றக்கூடும் என்று வல்லுநர்கள் அச்சம் தெரிவித்துள்ளார்கள்.
இதேபோல, பெரும்பாலான விஷயங்களில் மனிதர்களுக்கு மாற்றாக செயற்கை நுண்ணறிவு இருக்கக்கூடும் என்று மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் தன் கருத்தை தெரிவித்தார். குறிப்பாக அதற்கான வருங்கால முக்கியத்துவம் குறித்து அடிக்கோடிட்டு பல்வேறு விதமான கணிப்புகளை அவர் பகிர்ந்துகொண்டார்.
இதன்படி, கோடிங் பணிகளை மேற்கொள்ளுவதில் மனிதர்கள் முக்கியப் பங்காற்றுவார்கள் என்றும், செயற்கை நுண்ணறிவால் அந்த பணியில் முழுமையாக ஈடுபட முடியாது என்றும் பில் கேட்ஸ் கருத்து தெரிவித்துள்ளார். ஆனால் இதற்கு நேரெதிராக, கோடிங் பணிகளில் ஈடுபடுபவர்கள் செயற்கை நுண்ணறிவால் வேலைகளை இழப்பார்கள் என்று ஓபன் ஏஐ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சாம் ஆல்ட்மேன் தெரிவித்திருந்தார்.
மேலும், உயிரியலாளர்களை மாற்றுவது செயற்கை நுண்ணறிவால் முடியாத செயல் என்றும், அதேநேரம், நோயைக் கண்டறிவதிலும், டிஎன்ஏ ஆராய்ச்சியிலும் அது முக்கியப் பங்காற்றும் என்றும் பில் கேட்ஸ் கருத்து தெரிவித்துள்ளார். மேலும், எரிசக்தி துறை வல்லுனர்களையும் செயற்கை நுண்ணறிவால் முழுமையாக மாற்ற முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.