ராமநாதபுரத்தில் ஓ. பன்னீர்செல்வம் பெயரில் 5 வேட்புமனுக்கள் ஏற்பு

ஒரு ஓ. பன்னீர்செல்வத்தின் வேட்புமனு மட்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரத்தில் ஓ. பன்னீர்செல்வம் பெயரில் 5 வேட்புமனுக்கள் ஏற்பு

ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் உள்பட ஓ. பன்னீர்செல்வம் பெயரில் தாக்கல் செய்யப்பட்ட 5 வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

நாடு முழுவதும் 543 மக்களவைத் தொகுதிகளுக்கு ஏப்ரல் 19 முதல் ஜூன் 1 வரை 7 கட்டங்களாகத் தேர்தல் நடைபெறுகிறது. ஜூன் 4-ல் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகள் உள்பட மொத்தம் 102 மக்களவைத் தொகுதிகளுக்கு முதற்கட்டமாக ஏப்ரல் 19-ல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இதற்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 20-ல் தொடங்கிய நிலையில், நேற்றுடன் நிறைவடைந்தது. இன்று வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டன.

அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் ராமநாதபுரத்தில் பாஜக கூட்டணி சார்பில் சுயேச்சையாகப் போட்டியிடுகிறார். இதே தொகுதியில் ஓ. பன்னீர்செல்வம் பெயரில் மேலும் 5 பேர் வேட்புமனு தாக்கல் செய்தார்கள்.

இன்று வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்பட்ட நிலையில், ஒரு ஓ. பன்னீர்செல்வத்தின் வேட்புமனு மட்டுமே நிராகரிக்கப்பட்டது. முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் மேலும் நான்கு ஓ. பன்னீர்செல்வத்தின் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. ஐவரும் சுயேச்சையாகப் போட்டியிடுவதால், ராமநாதபுரத்தில் வாக்காளர்கள் மத்தியில் குழப்பம் ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வேட்புமனுக்களைத் திரும்பப் பெற மார்ச் 30 கடைசி நாள்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in