விபரீதக் காணொளியை வெளியிட்ட யூடியூபரும், அவரது நண்பரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள வாலத்தூரைச் சேர்ந்தவர் ரஞ்சித் பாலா. வித்தியாசமான முயற்சியை மேற்கொள்ளும் வகையில் இவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து காணொளியை வெளியிடுவது வழக்கம்.
இந்நிலையில் ரஞ்சித் பாலா தனது நண்பர்களுடன் சேர்ந்து மக்களை அச்சுறுத்தும் வகையில் ஒரு காணொளியை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கியுள்ளார். இவர் ஒரு கட்டடத்தின் மேலே நின்றும், கீழே தனது நண்பர்களை நிற்க வைத்தும் குளத்திற்குள் பெட்ரோலை ஊற்றி அதில் தீ வைத்து அந்த தீயில் குதிப்பது போல விபரீத காணொளியை பதிவிட்டார்.
இந்த விபரீதக் காணொளி இணையத்தில் வேகமாகப் பரவியது.
இதைத் தொடர்ந்து காவல் துறையினர் விபரீதக் காணொளியை எடுத்த மூன்று பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். இந்நிலையில் யூடியூபர் ரஞ்சித் பாலா மற்றும் அவரது நண்பர் சிவகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.