
கரூர் துயரச் சம்பவம் குறித்து வதந்தி பரப்பியதாக ரெட் பிக்ஸ் யூடியூப் சேனலின் நிறுவனர் ஃபெலிக்ஸ் ஜெரால்ட் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
கரூரில் தவெக தலைவர் விஜய் நடத்திய பரப்புரையின்போது கூட்டநெரிசல் ஏற்பட்டதில் பலருக்கு மூச்சுத் திணறல், மயக்கம் ஏற்பட்டது. இதில் இதுவரை 41 பேர் உயிரிழந்துள்ளார்கள். இச்சம்பவம் தொடர்பாக தவெக பொதுச்செயலாளர் என். ஆனந்த், இணைப் பொதுச்செயலாளர் நிர்மல்குமார், கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழகன் உள்ளிட்டோர் மீது காவல் துறையினர் நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளார்கள். மேலும், சம்பவம் குறித்து தமிழக அரசு சார்பில் ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை மேற்கொண்டுள்ளார்.
இதற்கிடையில் சமூக ஊடகங்களில் பொறுப்பற்ற வகையில் விஷமத்தனமான செய்திகள் பரப்புவதைத் தவிர்க்க வேண்டும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் காணொளி வெளியிட்டார். மேலும், சமூகவலைத்தளங்களில் வதந்திகளைப் பரப்பியதாக 25 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். மேலும், இச்சம்பவம் தொடர்பாக தவெக கரூர் மாவட்டச் செயலாளர் மதியழகன், கரூர் மத்திய மாநகர தவெக நிர்வாகி பவுன்ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
இந்நிலையில், கரூர் சம்பவம் தொடர்பாக வதந்தி பரப்பியதாக ரெட் பிக்ஸ் யூடியூப் சேனலின் நிறுவனர் ஃபெலிக்ஸ் ஜெரால்டைக் காவல்துறையினர் இன்று கைது செய்துள்ளார்கள்.