கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்ற இளைஞர் ஒருவர் 100 அடி பள்ளத்தில் விழுந்ததைத் தொடர்ந்து, தீயணைப்புத் துறையினரால் மீட்கப்பட்டுள்ளார்.
கொடைக்கானலில் உள்ள டால்ஃபின் நோஸ் சுற்றுலா பகுதிக்கு சென்ற தூத்துக்குடியைச் சேர்ந்த தன்ராஜ் என்கிற இளைஞர் 100 அடி பள்ளத்தில் விழுந்தார்.
அங்கிருந்த ஒரு பாறையின் விளிம்பிலிருந்து செல்ஃபி எடுக்க முயன்றபோது அவர் 100 அடி பள்ளத்தில் தவறி விழுந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் பள்ளத்தில் விழுந்த இளைஞரை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
சுமார் 3 மணிநேர போராட்டத்திற்குப் பிறகு, பள்ளத்தில் விழுந்த தன்ராஜை தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டுள்ளனர்.
இதன் பிறகு அவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் ஆபத்தான இடங்களில் செல்ஃபி எடுப்பதால் ஏற்படும் விபரீதத்தை எடுத்துக் காட்டும் பாடமாக அமைந்துள்ளது.