
தவெக தலைவர் விஜய்க்கு `ஒய்’ பிரிவு பாதுகாப்பு நடைமுறைக்கு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உயிருக்கு அச்சுறுத்தல் உள்ள மத்திய அமைச்சர்கள், ஆளுநர்கள், முதல்வர்கள், ராணுவத் தளபதிகள், உச்ச நீதிமன்ற-உயர் நீதிமன்ற நீதிபதிகள், நடிகர்கள், தொழிலதிபர், அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட பிரபலங்களுக்கு, உளவுத்துறை அறிக்கையின் அடிப்படையில் மத்திய உள்துறை அமைச்சம் பாதுகாப்பு வழங்கி வருகிறது.
அச்சுறுத்தல்களுக்கு ஏற்றபடி இசட் பிளஸ், இசட், ஒய் பிளஸ், ஒய், எக்ஸ் எனப் பல்வேறு பிரிவுகளாகப் பாதுகாப்பு வழங்கப்படுகிறது. இந்நிலையில், தவெக தலைவர் விஜய்க்கு `ஒய்’ பிரிவு பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளதாக கடந்த பிப்ரவரியில் செய்தி வெளியானது.
அரசியல் கட்சியை முன்பே தொடங்கிவிட்டாலும், முழுநேர அரசியலில் இனிதான் விஜய் ஈடுபடவுள்ளார். அரசியல் சார்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் பயணிக்க உள்ளதால், பாதுகாப்பு கருதி `ஒய்’ பிரிவு பாதுகாப்பை மத்திய உள்துறை அமைச்சகம் வழங்கி உத்தரவிட்டதாகக் கூறப்பட்டது.
இந்நிலையில், விஜய்க்கு `ஒய்’ பிரிவு பாதுகாப்பு நடைமுறைக்கு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி, விஜய்க்கான பாதுகாப்புப் பணியில் ஆயுதம் ஏந்திய 8 முதல் 11 சிஆர்பிஎஃப் வீரர்களும், தமிழக காவல்துறையினரும் சுழற்சி முறையில் ஈடுபடவுள்ளார்கள்.
அதேநேரம் இந்த `ஒய்’ பிரிவு பாதுகாப்பு தமிழ்நாட்டிற்குள் மட்டுமே அவருக்கு வழங்கப்படும். வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு விஜய் செல்லும்போது `ஒய்’ பிரிவு பாதுகாப்பு விலக்கிக்கொள்ளப்படும் என்று கூறப்படுகிறது.