பாமக தலைவராகத் தொடர்ந்து செயல்படுவேன்: அன்புமணி

"பொதுக்குழுக் கூட்டத்தில் ராமதாஸ் வாழ்த்துகளுடனும் உங்களின் ஆதரவுடனும் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவன் நான்."
பாமக தலைவராகத் தொடர்ந்து செயல்படுவேன்: அன்புமணி
படம்: https://x.com/draramadoss
1 min read

ராமதாஸுக்குப் புகழ் சேர்க்கும் வகையில் பாமகவைத் தொடர்ந்து வழிநடத்திச் செல்வேன் என அன்புமணி ராமதாஸ் மடல் எழுதியுள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாஸ் கடந்த 10 அன்று விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, "பாமக நிறுவனர் ராமதாஸ் ஆகிய நான், நிறுவனர் என்பதோடு பாமக தலைவர் பொறுப்பையும் நானே எடுத்துக்கொள்கிறேன். அன்புமணி இனி பாமக செயல் தலைவராக செயல்படுவார். 2026 சட்டப்பேரவை தேர்தலில் இளைஞர்களை வழிநடத்த இந்த முடிவை எடுத்துள்ளேன்" என்று ராமதாஸ் அறிவித்தார்.

மேலும், "இன்றைக்குத்தான் நான் தலைவராகப் பொறுப்பேற்றிருக்கிறேன். நானே நிறுவனர் மற்றும் தலைவர். இனி நிர்வாகக்குழு, செயற்குழு, மாவட்டச் செயலாளர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் என அனைவரையும் அழைத்துப் பேசி முடிவெடுப்போம். இதற்கு காரணங்கள் நிறைய உண்டு, ஆனால் அவற்றையெல்லாம் உங்களிடம் பகிர்ந்துகொள்ள முடியாது" என்று ராமதாஸ் தெரிவித்தார்.

ஏற்கெனவே கடந்த டிசம்பரில் பாமக பொதுக்கூட்ட மேடையில், இளைஞரணித் தலைவர் நியமனத்தை முன்வைத்து ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே மோதல் வெடித்தது. இதன் தொடர்ச்சியாக அன்புமணியின் தலைவர் பதவி பறிக்கப்பட்டது பாமக உள்கட்சிப் பிரச்னையா அல்லது தந்தை - மகன் பிரச்னையா என்ற குழப்பம் ஏற்பட்டது. பாமக தொண்டர்களிடத்திலேயே ராமதாஸின் அறிவிப்பு வியப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இவ்விவகாரம் தொடர்பாக அன்புமணி ராமதாஸ் முதன்முறையாக மௌனம் கலைத்துள்ளார். ஏப்ரல் 12 தேதியிட்டு தொண்டர்களுக்கு மடல் எழுதியுள்ள அன்புமணி ராமதாஸ், ராமதாஸுக்குப் புகழ் சேர்க்கும் வகையில் பாமகவைத் தொடர்ந்து வழிநடத்திச் செல்வேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

"பாமக தலைவர் பதவி குறித்து எதிர்பாராத குழப்பங்கள் நிலவி வருகின்றன. அதன் காரணமாக, கட்சி வளர்சிக்கும், மாமல்லபுரம் சித்திரை முழுநிலவு வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாட்டுப் பணிகளுக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்பட்டு விடக் கூடாது என்பதை மனதில் கொண்டு, உங்களின் ஐயங்களைப் போக்கவே இந்த மடல்.

பாமக கட்சியால் உருவாக்கப்பட்ட கொள்கை விதிகளின்படி, பாமக தலைவரைக் கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்கள் தான் தேர்வு செய்ய முடியும். அதனடிப்படையில், 2022-ம் ஆண்டு மே மாதம் 28 அன்று சென்னையில் நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டத்தில் ராமதாஸ் வாழ்த்துகளுடனும் உங்களின் ஆதரவுடனும் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவன் நான். அதை இந்திய தேர்தல் ஆணையமும் அங்கீகரித்திருக்கிறது. எனவே, பாமக தலைவராக நான் தொடர்ந்து செயல்படுவேன்.

2026 சட்டப்பேரவைத் தேர்தலைப் பொறுத்தவரை பாட்டாளி சொந்தங்கள் விரும்பும் வலிமையானக் கூட்டணியை ராமதாஸ் வழிகாட்டுதலுடன் அமைக்க வேண்டியது எனது பெரும் கடமையாகும். அந்தக் கடமையைச் சரியான நேரத்தில் செய்து முடிப்போம்" என்று அன்புமணி ராமதாஸ் தனது மடலில் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in