
தமிழ்நாடு அரசு சாதியவாதிகளிடம் ஏன் தோற்றுப்போகிறது என்று விசிக எம்.பி. து. ரவிக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
விசிக பொதுச்செயலாளரும், விழுப்புரம் எம்.பி.யுமான து. ரவிக்குமார் இன்று (ஏப்.17) காலை தன் எக்ஸ் கணக்கில் வெளியிட்ட பதிவில் கூறியதாவது,
`சனாதனவாதிகளை எதிர்ப்பதில் வெற்றி காணும் தமிழ்நாடு அரசு சாதியவாதிகளிடம் ஏன் தோற்றுப் போகிறது?’ என்றார்.
ரவிக்குமாரின் இந்த பதிவுக்கு, திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் சாதிய வன்கொடுமையால் ஏற்கனவே தாக்குதலுக்கு ஆளான பட்டியலின மாணவன் சின்னத்துரை மீது, நேற்று மீண்டும் நடைபெற்ற தாக்குதல் காரணமாக கூறப்படுகிறது.
திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரியைச் சேர்ந்த சின்னத்துரை கடந்த 2023-ல் வள்ளியூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்தான். சாதிய வன்கொடுமையின் வெளிப்பாடாக, அவனுடன் படித்த சக மாணவர்கள் உள்ளிட்ட சிறுவர்கள் சிலர் கடந்த 2023 ஆகஸ்டில் சின்னத்துரையை வீடு புகுந்து அரிவாளால் வெட்டினர்கள்.
இந்நிலையில், நேற்று (ஏப்.17) சின்னத்துரை மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக, திருநெல்வேலி மாவட்டக் காவல்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியதாவது,
`சின்னத்துரை (த.பெ. முனியாண்டி) என்பவர் திருமால் நகர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் தனது தாய் மற்றும் தங்கையுடன் வசித்துவருகிறார். இவர் தூய சவேரியார் கல்லூரியில் இளங்கலை முதலாம் ஆண்டு வணிகவியல் பட்டப்படிப்பைப் படித்து வருகிறார்.
நேற்று (ஏப்.16) மாலை சுமார் 6.15 மணியளவில் தனது நண்பரை பார்க்க பாளையங்கோட்டை செல்வதாக தாயார் அம்பிகாவிடம் கூறிவிட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டிலிருந்து கிளம்பிச் சென்றுள்ளார். சுமார் 7.30 மணியளவில், இனம் தெரியாத நபரின் கைப்பேசி மூலம் தனது தாயாரை அவர் தொடர்புகொண்டு, மாவட்ட அறிவியல் மையம் அருகிலுள்ள பகுதியில் வைத்து அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் தன்னை தாக்கியதாக தகவல் தெரிவித்துள்ளார்.
பின்னர் தகவல் கிடைத்தவுடன் காவல்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று வலது கையில் சிறிய காயத்துடன் இருந்த சின்னதுரையை 108 ஆம்புலன்ஸில் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
தாக்குதல் சம்பவம் தொடர்பாக மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த சின்னதுரையிடம் விசாரித்தபோது, தனது இன்ஸ்டாகிராம் நண்பரின் அழைப்பின்பேரில் கொக்கிரகுளம் அருகிலுள்ள வசந்தம் நகர் விரிவாக்கப்பகுதிக்கு சென்றதாகவும், பின்னர் அங்கு வந்த அடையாளம் தெரியாத 4 நபர்கள் பணம் கேட்டதாகவும், தன்னிடம் பணம் இல்லாததால் அவர்கள் கட்டையால் அடித்து வலதுகையில் காயம் ஏற்படுத்திவிட்டு கைப்பேசியை பறித்து சென்றதாகவும் தெரிவித்தார்.
மேற்படி விசாரணைக்காக சின்னதுரையிடம் அவரது இன்ஸ்டாகிராம் கணக்கின் பயனர் பெயரையும், கடவுச்சொல்லையும் கேட்டபோது தனக்கு மறந்துவிட்டதாகக் கூறினார். இன்ஸ்டாகிராம் கணக்கினை மீட்டெடுப்பதற்காக அவரது மின்னஞ்சல் முகவரி மற்றும் கடவுச்சொல்லை கேட்டபோது அதுவும் தனக்கு மறந்துவிட்டதாக கூறுகிறார்.
கையில் ஏற்பட்ட சிறிய காயத்திற்கு சிகிச்சை முடிந்து தனது சொந்த விருப்பத்தின்பேரில் சின்னதுரை மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார். மேற்படி சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை செய்துவருகின்றனர்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.