
காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் இன்னும் கரையைக் கடக்காததால் சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மைய தென்மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் சென்னை அருகே நாளை காலை கரையைக் கடக்கிறது. இதன் காரணமாக அதிகனமழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக நேற்று வரை எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டு வந்தன. அதேவேளையில், சென்னையில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் இன்று காலை தெரிவித்தது. தொடர்ந்து, சிவப்பு நிற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.
இந்த நிலையில், சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பாலச்சந்திரன் சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதன் காரணத்தை விளக்கினார்.
அவர் கூறியதாவது:
"கடந்த 24 மணி நேரத்தில் வடதமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்துள்ளது. வடகிழக்குப் பருவமழை தீவிரமாக உள்ளது. 5 இடங்களில் அதிகனமழையும் 48 இடங்களில் மிகக் கனமழையும் 21 இடங்களில் கனமழையும் பெய்துள்ளது.
அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டம் சோழவரத்தில் 30 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
வடகிழக்குப் பருவமழையைப் பொறுத்தவரை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் கடந்த 1 முதல் இன்று வரையிலான காலகட்டத்தில் பதிவான மழையின் அளவு 138 மி.மீ. இந்தக் காலகட்டத்தில் இயல்பான மழையின அளவு 71 மி.மீ. இது இயல்பிலிருந்து 94 சதவீதம் அதிகம்.
தற்போது தென் மேற்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் சென்னைக்கு கிழக்கு தென்கிழக்கே சுமார் 250 கி.மீ. தொலைவிலும் புதுவைக்கு கிழக்கு தென்கிழக்கே சுமார் 320 கி.மீ. தொலைவிலும் ஆந்திரப் பிரதேசம் நெல்லூருக்கு தென்கிழக்கே சுமார் 370 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. மணிக்கு 15 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது.
தொடர்ந்து மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை அதிகாலை வடதமிழகம் தெற்கு ஆந்திரம் கடற்பகுதியில் புதுவைக்கும் நெல்லூருக்கும் இடையே சென்னை அருகே கரையைக் கடக்கும்.
இதன் காரணமாக அடுத்த 4 நாள்களுக்கு தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். கனமழை எச்சரிக்கையைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்துக்கு திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் அதிகனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிகக் கனமழை பெய்யக்கூடும்.
காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் இன்னும் கரையைக் கடக்கவில்லை, கடலில் தான் உள்ளது என்பதால் சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் அனைத்து இடங்களிலும் 20 செ.மீ. அளவுக்கு மேல் பெரிய அளவில் மழை இருக்கும் என்று அர்த்தமில்லை. முழு காற்றழுத்தத் தாழ்வு வலுவிழக்கவில்லை. கரையை நோக்கி வருகிறது. காலைப் பொழுது பகல் பொழுதுக்கு இடையே வேறுபாடு இருக்கக்கூடிய சூழலில் நாளை காலை கரைக்கு அருகில் வருகின்றபோது மழை பெய்யக்கூடிய வாய்ப்பு இருப்பதால், ஏற்கெனவே பெய்த மழை மற்றும் அதன் பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு ஓரிரு இடங்களில் கன முதல் அதிகனமழைக்கு வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாகவே சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தற்போதைய நிலையில் இது புயலாக மாறுவதற்கு வாய்ப்பில்லை. சுமார் 200 கி.மீ. தொலைவில்தான் உள்ளது. புயலாக மாற இன்னும் இரண்டு, மூன்று கட்டங்கள் உள்ளன" என்றார் பாலச்சந்திரன்.