
திருநெல்வேலியில் உள்ள இருட்டுக்கடை தனக்கே சொந்தம் என்று தற்போதைய உரிமையாளர் கவிதாவின் அண்ணன் நயன் சிங் அறிவித்துள்ளார்.
திருநெல்வேலி அல்வாவுக்குப் பேர்போன இருட்டுக்கடையின் உரிமையை மாற்றித் தருமாறு மருமகன் பல்ராம் சிங் கேட்பதாக, கடையின் தற்போதைய உரிமையாளர் கவிதா அண்மையில் குற்றம்சாட்டியிருந்தார். இது தொடர்பாக கணவர் பல்ராம் சிங் மீது கவிதாவின் மகள் கனிஷ்கா வரதட்சணைப் புகார் அளித்திருந்தார்.
இந்நிலையில், திடீர் திருப்பமாக இருட்டுக்கடை தனக்கே சொந்தம் என்றும், அது தொடர்பான உயில் தன்னிடம் இருப்பதாகவும் கவிதாவின் அண்ணன் நயன் சிங் அறிவித்துள்ளார்.
இருட்டுக்கடையின் உரிமையாளர்களான பிஜிலி சிங்-சுலோச்சனா பாய் தம்பதியருக்கு நேரடி வாரிசு கிடையாது; எனவே சுலோச்சனா பாயின் சகோதரர் ஜெயராம் சிங்கின் மகனான நயன் சிங்குக்கு, இருட்டுக்கடை மற்றும் பிஜிலி சிங்குக்கு பாத்தியப்பட்ட சொத்துக்கள் அனைத்தும் சொந்தம் என்று 1999-ல் எழுதப்பட்ட உயில் உள்ளதாக நயன் சிங்கின் வழக்கறிஞர் சார்பில் செய்தித்தாளில் அறிக்கை வெளியிடப்பட்டது.
மேலும், இந்த விவகாரம் தொடர்பாக திருநெல்வேலி மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் நயன் சிங் சார்பில் கடந்த 2023-ல் வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், இது தொடர்பாக இன்று (ஏப்.25) செய்தியாளர்களை சந்தித்து இருட்டுக்கடையை தன் பெயருக்கு எழுதி வைத்த உயில் உள்ளதாக நயன் சிங் விளக்கமளித்தார்.