
திருநெல்வேலியின் பிரபல இருட்டுக் கடை அல்வா கடை தனக்கே சொந்தம் என பிரேம் ஆனந்த் சிங் பொது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
திருநெல்வேலியில் புகழ்பெற்ற அல்வா கடை தான் இருட்டுக் கடை. கவிதா சிங் என்பவர் இக்கடையை நடத்தி வருகிறார். அண்மையில் கவிதா சிங்கின் மகளுக்கு கோவையைச் சேர்ந்த பல்ராம் சிங் என்பவருடன் திருமணம் நடைபெற்றது.
திருமணமான 40 நாள்களில் கவிதா சிங் மகள் தரப்பில் வரதட்சணைப் புகார் அளிக்கப்பட்டது. இருட்டுக் கடை உரிமையை மாற்றித் தருமாறு வரதட்சணைக் கொடுமை செய்வதாகவும் கொலை மிரட்டல் விடுக்கப்படுவதாகவும் கணவர் பல்ராம் சிங் மீது நெல்லை மாநகரக் காவல் ஆணையர் மற்றும் முதல்வரின் தனிப் பிரிவில் புகார் அளிக்கப்பட்டது.
இந்தப் பிரச்னை ஓய்வதற்குள் கவிதா சிங்கின் சகோதரர் நயன்சிங் என்பவர் இருட்டுக் கடையின் உரிமம் தன்னிடம் இருப்பதாகவும் அதற்கான உயிலைத் தான் வைத்துள்ளதாகவும் அறிவிப்பை வெளியிட்டிருந்தார். இதற்குப் பதிலளிக்கும் விதமாக பொது அறிவிப்பை வெளியிட்ட கவிதா சிங், இருட்டுக் கடையைத் தன்னிடமிருந்து அபகரிக்க முயற்சிப்பதாக நயன் சிங் மீது குற்றம்சாட்டினார்.
இந்த விவகாரம் மேலும் விரிவடையும் வகையில் பிரேம் ஆனந்த் சிங் என்பவர் ஒரு பொது அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளார். இவரும் இருட்டுக் கடை அல்வா கடை தனக்கே சொந்தம் என அறிவிப்பினை வெளியிட்டிருக்கிறார். இவர் இருட்டுக் கடையின் நிறுவனர் கிருஷ்ண சிங்கின் சகோதரருடையப் பேரன். ஹிந்து வாரிசு உரிமைச் சட்டப்படி தனக்கே இந்தக் கடை பிரேம் ஆனந்த் சிங்குக்கே இந்தக் கடை சொந்தம் என பொது அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.