ரூ. 6-க்கு மின்சாரம் தயாரிக்க முடிந்த நிலையில், ரூ. 20-க்கு தமிழக அரசு கொள்முதல்: அன்புமணி ராமதாஸ்

ஒரு மாநிலத்தின் ஒட்டுமொத்த மின் தேவையில் குறைந்தது 75% சொந்தமாக உற்பத்தி செய்யப்படவேண்டும்.
ரூ. 6-க்கு மின்சாரம் தயாரிக்க முடிந்த நிலையில், ரூ. 20-க்கு தமிழக அரசு கொள்முதல்: அன்புமணி ராமதாஸ்
ANI
1 min read

தமிழக அரசு வசம் உள்ள அனல்மின் நிலையங்களில் ரூ. 6-க்கு மின்சாரம் தயாரிக்க முடிந்த நிலையில், ரூ. 20-க்கு மின்சாரம் கொள்முதல் செய்யப்படுவதாகவும், கடந்த 10 ஆண்டுகளில் ஒரு அனல் மின் நிலையத் திட்டம் கூட மாநிலத்தில் செயல்படுத்தப்படவில்லை என்றும் குற்றம்சாட்டியுள்ளார் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்.

`பற்றாக்குறையை சமாளிக்க தனியாரிடமிருந்து ரூ.20-க்கு மின்சாரம் வாங்குவதா? மின் திட்டங்களை விரைவுபடுத்த வேண்டும்’ எனத் தலைப்பிட்டு அன்புமணி ராமதாஸ் இன்று (பிப்.11) வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது,

`தமிழ்நாட்டில் பிப்ரவரி மாதத்தின் மாலை நேரத்தில் சுமார் 3 ஆயிரம் மெகாவாட் அளவுக்கு மின்பற்றாக்குறை நிலவுவதாகவும், ஏப்ரல் மாதத்தில் இது 4,697 மெகாவாட்டாக அதிகரிக்கும் என்றும் மத்திய மின்சார ஆணையத்தின் அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு இன்றைய நிலையில் அனைத்து ஆதாரங்களில் இருந்தும் 15,646 மெகாவாட் மின்சாரம் கிடைக்கிறது. மாலை மற்றும் இரவு நேர மின் தேவை 18,600 மெகாவாட் ஆக இருப்பதாகவும், ஏப்ரல் மாதத்தில் இது 23,135 ஆக அதிகரிக்கும் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்பற்றாக்குறையை சமாளிக்க சில நேரங்களில் ஒரு யூனிட் ரூ. 20 என்ற விலைக்கு மின்சாரத்தை வாங்க வேண்டியிருக்கும் என்றும், கோடைக்காலத்தில் மின்சாரத்தின் விலை மேலும் அதிகரிக்கக்கூடும் என்றும் மின்சார வாரிய அதிகாரிகள் தெரிவித்ததாக நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு சொந்தமான அனல் மின் நிலையங்களில் ஒரு யூனிட் மின்சாரத்திற்கான உற்பத்திச் செலவு ரூ.6-க்கும் குறைவாகவே இருக்கும் நிலையில், தனியாரிடமிருந்து அதிக விலை கொடுத்து மின்சாரத்தை வாங்க வேண்டியிருப்பதாக செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு மாநிலத்தின் ஒட்டுமொத்த மின் தேவையில் குறைந்தது 75% சொந்தமாக உற்பத்தி செய்யப்படவேண்டும். ஆனால், தமிழ்நாட்டில் நிலைமை தலைகீழாக உள்ளது. தமிழ்நாட்டின் மின் தேவை 18,600 மெகாவாட்டாக இருக்கும் நிலையில், மாநிலத்தின் அனல் மின்நிலையங்களின் உற்பத்தித் திறன் வெறும் 4320 மெகாவாட் மட்டுமே.

தமிழ்நாட்டில் கடந்த 20 ஆண்டுகளில் 2100 மெகாவாட் அளவுக்கு மட்டுமே அனல் மின் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. கடந்த பத்தாண்டுகளில் ஒரு அனல் மின் திட்டம் கூட செயல்படுத்தப்படவில்லை. 5700 மெகாவாட் அளவுக்கான அனல் மின் திட்டங்களுக்கான அடிப்படைப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

இந்தத் திட்டங்கள் விரைந்து செயல்படுத்தப்பட்டால் தனியாரிடமிருந்து மின்சாரம் வாங்க வேண்டிய நிலை ஏற்படாது. ஆனால், தங்களின் சுயநலனுக்காக அப்படி ஒரு நிலை உருவாவதை ஆட்சியாளர்கள் விரும்பவில்லை. இதே நிலை நீடித்தால் எத்தனை முறை மின் கட்டணம் உயர்த்தப்பட்டாலும் மின்சார வாரியத்தை லாபத்தில் இயக்க முடியாது.

எனவே நிலுவையில் உள்ள அனல் மின் திட்டங்களை விரைந்து செயல்படுத்தி மின்னுற்பத்தியில் தன்னிறைவு பெற்ற மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும்’ என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in