
கோயமுத்தூர், நீலகிரி, தேனி, திண்டுக்கல், தென்காசி என தமிழகத்தின் 5 மாவட்டங்களில் நாளை (ஏப்.6) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் உள்ள மண்டல வானிலை ஆய்வு மையம் இன்று (ஏப்ரல் 5) வெளியிட்ட வானிலை அறிக்கையில் கூறியதாவது,
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தின் அநேக இடங்களிலும், வட தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரியிலும் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக, கன்னியாகுமரி மாவட்டம் கோழிப்போர்விளையில் 19 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
இன்று (ஏப்ரல் 5) தமிழகத்தில் ஒரு சில இடங்களில், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல் மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை (ஏப்ரல் 6) தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல் மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
ஏப்ரல் 5 மற்றும் 6-ம் தேதிகளில் தமிழகத்தில் அதிகபட்ச வெப்ப நிலையில் பெரிய மாற்றதிற்கான வாய்ப்பு குறைவு. ஏப்.7 முதல் 9-ம் தேதி வரை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒரு சில இடங்களில் 2-3° செல்சியஸ் வரை படிப்படியாக உயரக்கூடும்.