
தனது வீட்டில் அத்துமீறி நுழைந்த சிலர் பொருள்களைச் சூறையாடியதாகவும், வீடு முழுவதும் கழிவு நீரை ஊற்றியதாகவும் அது தொடர்பான காணொளியை வெளியிட்டு, பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் குற்றம் சாட்டியுள்ளார். இதையடுத்து இச்சம்பவத்துக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளார்கள்.
இந்த விவகாரம் தொடர்பான சிசிடிவி காட்சிகளை தன் எக்ஸ் கணக்கில் பதிவிட்டு, சவுக்கு சங்கர் கூறியதாவது,
`இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கி, துப்புரவு தொழிலாளிகள் என்று கூறிக்கொண்டு 50 பேர் கொண்ட கும்பல் நானும், என் தாயாரும் குடியிருக்கும் வீட்டில் சரமாரியாக தாக்குதல் நடத்தி வருகிறது.
நான் வெளியே கிளம்பிய 5 நிமிடத்தில் வந்த இந்த கும்பல், வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்து, படுக்கையறை, சமையலறை, சமையல் பொருட்கள் என அத்தனை பொருட்களின் மீதும் சாக்கடையையும், மலத்தையும் கொட்டினர்.
நடந்தவை தொடர்பாக விசாரிக்க என் தாயாருக்கு அழைத்தபோது, அவரின் கைப்பேசியை வாங்கி வீடியோ காலில் வந்து அவர்கள் கொலை மிரட்டல் விடுத்தார்கள்’ என்றார்.
சவுக்கு சங்கரின் வீடு சூறையாடப்பட்டதற்கு அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமியும், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையும் விசிக தலைவர் தொல். திருமாவளவனும் கண்டனம் தெரிவித்துள்ளார்கள்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், சவுக்கு சங்கர் வீட்டில் இன்று (24.3.2025) காலை, அவரது தாயார் தனியாக இருந்தபோது, 50 பேர் கொண்ட கும்பல் வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்து சில பொருட்களை எடுத்துச் சென்றதுடன், படுக்கையறை, சமையல் அறை, சமையல் பொருட்கள் என்று அனைத்துப் பொருட்களின் மீதும் சாக்கடையையும், மலத்தையும் கொட்டி உள்ளார்கள் என்ற செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற கீழ்த்தரமான செயல் மற்றும் தாக்குதல் கண்டனத்திற்குரியது. ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையுள்ள யாரும் இதை சகித்துக்கொள்ள மாட்டார்கள். உண்மையில் இந்தச் சம்பவம் கொடுமையின் உச்சம்; அராஜகத்தின் வெளிப்பாடு. இந்தக் கொடுமையான செயலை செய்த கும்பலையும், பின்னணியில் உள்ள அனைவரையும் சட்டத்தின் முன்பு நிறுத்தி கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்றார்.
தமிழக பாஜக தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சவுக்கு சங்கர் மீது நடத்தப்படும் இந்த வன்முறையைக் கடுமையாகக் கண்டிக்கிறோம். இதன் பின்னணியில் இருப்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம் என்றார்.
விசிக தலைவர் தொல். திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், சவுக்கு சங்கரின் இல்லத்தில் நுழைந்து அவரது தாயாரை அச்சுறுத்தியதுடன், ஆங்கே மனிதக் கழிவு உள்ளிட்ட சாக்கடை கழிவுகளைக் கொட்டியுள்ள குரூரச் செயல் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. எனினும், இது அநாகரித்தின் உச்சம். அருவருப்பான இந்த நடவடிக்கைகளை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. திமுக அரசின் மீது களங்கத்தை ஏற்படுத்துவதாகவே இந்த இழிசெயல் அமைந்துள்ளது. எனவே, தமிழ்நாடு அரசு இதில் தொடர்புடையவர்கள் அனைவரின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறோம் என்று கூறியுள்ளார்.