கோப்புப்படம்
கோப்புப்படம்

வக்ஃபு சட்டத் திருத்த மசோதாவைத் திரும்பப் பெற வேண்டும்: தவெக தலைவர் விஜய்

"சிறுபான்மையினருக்கு நம் அரசியலமைப்பும் நம் நாட்டின் தலைவர்களும் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் காற்றில் பறக்க விடுவதன்றி வேறென்ன?"
Published on

ஜனநாயகத்துக்கு எதிரான வக்ஃபு சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதிலும் வக்ஃபு வாரிய சொத்துகள் பதிவு செய்யப்படுவதை ஒழுங்குபடுத்துவதற்காக, 1995 வக்ஃபு சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளும் வகையிலான சட்டத் திருத்த மசோதா கடந்தாண்டு ஆகஸ்டில் மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டது.

நாடாளுமன்றக் கூட்டுக்குழு பரிசீலனைக்குப் பிறகு கூட்டுக்குழு அறிக்கையின் அடிப்படையில் புதிய வக்ஃபு சட்டத் திருத்த மசோதா மக்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. மசோதா மீதான விவாதத்தைத் தொடர்ந்து, நள்ளிரவில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. மசோதாவுக்கு ஆதரவாக 288 எம்.பி.க்களும் மசோதாவுக்கு எதிராக 232 எம்.பி.க்களும் வாக்களித்தார்கள்.

இதைத் தொடர்ந்து, மாநிலங்களவையில் நிறைவேற்றுவதற்காக மசோதாவானது மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டு அதன் மீது விவாதம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ஜனநாயகத்துக்கு எதிரான வக்ஃபு சட்டத் திருத்த மசோதாவைத் திரும்பப் பெற வலியுறுத்தி தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

"இந்தியாவில் உள்ள இஸ்லாமிய சகோதரர்கள் தங்களின் வழிபாட்டு முறையிலான பண்பாட்டு வாழ்வைப் பின்பற்றும் அனைத்து உரிமைகளையும் இந்திய அரசியலமைப்புச் சட்டம், 'இஸ்லாமியத் தனியுரிமைச் சட்டங்கள்' வழியே அடிப்படை உரிமையாக அங்கீகரிக்கிறது.

வக்ஃபு வாரியச் சட்டம் என்பது முஸ்லிம்களின் இறையியல் வாழ்வு மற்றும் சமூகப் பொருளாதாரத்தோடு பின்னிப் பிணைந்தது. இஸ்லாமியத் தனியுரிமைச் சட்டத்தின் முக்கிய அமைப்பு.

வக்ஃபு வாரியச் சட்டத்தைச் சிதைப்பது என்பது சிறுபான்மையினருக்கு நம் அரசியலமைப்பும் நம் நாட்டின் தலைவர்களும் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் காற்றில் பறக்க விடுவதன்றி வேறென்ன?" என்று விஜய் கேள்வியெழுப்பியுள்ளார்.

விஜயின் முழு அறிக்கை:

logo
Kizhakku News
kizhakkunews.in