அக்டோபர் 3-வது வாரத்தில் தவெகவின் முதல் மாநாடு?

காவல் துறை விதித்த நிபந்தனைகளை நிறைவேற்ற குறுகிய காலமே உள்ளதால்..
அக்டோபர் 3-வது வாரத்தில் தவெகவின் முதல் மாநாடு?
1 min read

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டுக்கான தேதியை மாற்ற முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

தவெக தலைவர் விஜய் கடந்த ஆகஸ்ட் 22 அன்று கட்சிக் கொடியை அறிமுகம் செய்து வைத்து, கொடிப் பாடலையும் வெளியிட்டார். இதைத் தொடர்ந்து தவெக கொடியின் விளக்கத்தையும் வரலாற்றையும் மாநாட்டில் அறிவிக்கிறேன் என்று விஜய் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு எப்போது நடைபெறும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்தது. இதைத் தொடர்ந்து தவெகவின் முதல் மாநாடு செப்டம்பர் 23-ல் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியான நிலையில், இது தொடர்பாக விழுப்புரம் விக்கிரவாண்டியில் மாநாட்டை நடத்த அனுமதி கோரி அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மனு அளித்திருந்தார்.

இதைத் தொடர்ந்து புஸ்ஸி ஆனந்திடம், மாநாடு தொடர்பான 21 கேள்விகளை எழுப்பி அவற்றுக்குப் பதிலளிக்குமாறு விழுப்புரம் மாவட்டக் காவல்துறை சார்பில் நோட்டீஸ் அளிக்கப்பட்டது.

இதை அடுத்து நோட்டீஸில் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்து தவெக சார்பில் விழுப்புரம் மாவட்டக் காவல்துறையிடம் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் விக்கிரவாண்டியில் தவெக கட்சியின் முதல் மாநாட்டை நடத்த நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியது காவல்துறை.

இதைத் தொடர்ந்து காவல் துறை விதித்த நிபந்தனைகளை நிறைவேற்ற குறுகிய காலமே உள்ளதால் அக்டோபர் 3-வது வாரத்தில் மாநாட்டை நடத்த முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும், மாநாடு குறித்து விஜய் அதிகாரபூர்வமாக அறிவித்த பிறகு புஸ்ஸி ஆனந்த் விக்கிரவாண்டி காவல்துறை கண்காணிப்பாளரை நேரில் சந்தித்து கடிதம் வழங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in