
அரசியலில் முதன்முதலாக பேண்ட், சட்டை அணிந்தது தான் தான் என தேமுதிக இளைஞரணிச் செயலாளர் விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார்.
தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் கடந்த 2023-ல் காலமானார். இவருடைய மறைவுக்குப் பிறகு கட்சியின் முதல் பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டம் தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே இன்று நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் புதிய இளைஞரணிச் செயலராக விஜய பிரபாகரன் நியமிக்கப்பட்டார். பொதுச்செயலாளராக பிரேமலதா விஜயகாந்த், அவைத் தலைவராக வி. இளங்கோவன், பொருளாளராக எல்.கே. சுதீஷ், தலைமை நிலையச் செயலாளராக ப. பார்த்தசாரதி, கொள்கை பரப்புச் செயலராக அழகாபுரம் ஆர். மோகன்ராஜ் ஆகியோர் ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டார்கள்.
தேமுதிக இளைஞரணிச் செயலாளர் விஜய பிரபாகரன் பேசுகையில்,
"இளைஞரணியின் அடையாளம் மஞ்சள் நிற சட்டை, கருப்பு நிற பேண்ட் என்று எல்கே சுதீஷ் சொன்னார். நான் வெள்ளை நிற ஆடையில் இருந்தேன். தருமபுரியில் விடுதியில் ஏறும்போது வெள்ளை நிற உடையில் ஏறினேன். இங்கு இறங்கும்போது மஞ்சள் நிற சட்டை மற்றும் கருப்பு நிற பேண்டுடன் இறங்கினேன். காரில் வரும் வழியில் ஏற்பாடு செய்து உடையை மாற்றினேன். இந்த வேகம் எனக்குள் இருந்தால், அதே வேகம் கடைகோடி தொண்டருக்கும் இருக்க வேண்டும்.
நான் கட்சிக்குள் வந்திருக்கிறேன் என்றால், என் அப்பா நம் தலைவரின் கனவை நிறைவேற்ற வேண்டும். தலைவருக்காகவே நாம் அரசியலுக்குள் வந்துள்ளோம். நீங்கள் இருக்கும் எல்லோரும் கேப்டனுக்காக இருக்கிறீர்கள். இனி விஜய பிரபாகரனுக்காக கட்சிக்குள் கூட்டம் வர வேண்டும். அதற்கான வேலைகளை இளைஞர்கள் பட்டாளம் நாம் செய்ய வேண்டும். என் பின்னாடி கூட்டம் வருவதற்கு நான் நடிகனல்ல.
கேப்டன் மகனாக உங்களுடையத் தம்பியாக நான் வந்திருக்கிறேன். நிச்சயம் என்னைவிட 10 மடங்கு பெரிய ஆள்கள் வந்தாலும் நின்று போராடும் வலிமை என்னிடம் உள்ளது. தமிழ்நாடு அரசியலில் ஒரு திருப்பம் ஏற்படப்போகிறது. அது நம்மை நோக்கி வரப்போகிறது. எத்தனையோ புதிய கட்சிகள் வந்தாலும் களத்தில் வலிமையாக இருக்கக்கூடிய ஒரே கட்சி தேமுதிக தான்.
நான் வேஷ்டி சட்டை அணிந்து வர வேண்டும் என சிலர் கூறினார்கள். அரசியலில் முதன்முதலாக பேண்ட், சட்டை அணிந்ததே நான் தான். அதற்குப் பிறகு தான் அண்ணாமலை, சீமான், முதல்வர் ஸ்டாலின், விஜய் என எல்லோரும் பேண்ட், சட்டை அணிகிறார்கள். தோற்றத்தைவிட்டு உள்ளத்தைப் பாருங்கள்.
மக்களுக்கான சேவையை நாம் செய்வோம். கட்சியின் வேஷ்டியை என்றைக்கு அணிய வேண்டும் என்று கேப்டன் சொல்வார், அன்று அணிவேன். பிரேமலதா கூறியதைப்போல 234 தொகுதிகளிலும் சுற்றுப்பயணம் செய்யத் தயாராக இருக்கிறேன்" என்றார் விஜய பிரபாகரன்.