தேமுதிக இளைஞரணி செயலாளராக விஜய பிரபாகரன் நியமனம்!

விஜயகாந்த் மறைவுக்குப் பிறகு முதல்முறையாக தேமுதிக செயற்குழு மற்றும் பொதுக்குழு தருமபுரியில் நடந்தது.
விஜய பிரபாகரன்
விஜய பிரபாகரன்
1 min read

தேமுதிகவின் புதிய இளைஞரணித் தலைவராக விஜய பிரபாகரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

தேமுதிகவின் நிறுவனத் தலைவர் விஜயகாந்த் கடந்த 28 டிசம்பர் 2023-ல் உடல்நலக்கோளாரால் உயிரிழந்தார். அவரது மறைவுக்குப் பிறகான அக்கட்சியின் முதல் பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டம் தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே உள்ள வெள்ளிச்சந்தையில் இன்று (ஏப்.30) நடைபெற்றது.

இதில், அக்கட்சியின் புதிய இளைஞரணி செயலாளராக விஜய பிரபாகரன் நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் அரசியலில் தீவிரமாக இயங்கி வந்த விஜயகாந்தின் மூத்த மகனான விஜய பிரபாகரனுக்கு, கட்சியில் முக்கியப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

மேலும், கட்சியின் பொதுச்செயலாளராக பிரேமலதா விஜயகாந்த், அவைத்தலைவராக வி. இளங்கோவன், பொருளாளராக எல்.கே. சுதீஷ், தலைமை நிலையச் செயலாளராக ப. பார்த்தசாரதி, கொள்கை பரப்பு செயலாளராக அழகாபுரம் ஆர். மோகன்ராஜ் ஆகியோர் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அடுத்தாண்டு ஜனவரி 9-ல் தேமுதிக மாநில மாநாடு கடலூரில் நடைபெறும் என்றும், கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் அறிவிக்கப்படும் என்றும் இந்த மாநாட்டில் பிரேமலதா விஜயகாந்த் பேசியுள்ளார். அத்துடன், கட்சி வளர்ச்சி நிதியாக ரூ. 50 ஆயிரத்தை பொருளாளர் சுதீஷிடம் அவர் வழங்கினார்.

கடந்த மக்களவைத் தேர்தலில் விருதுநகர் தொகுதியில் போட்டியிட்ட விஜய பிரபாகரன், காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரிடம் 4,379 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in