
விக்கிரவாண்டி வி. சாலையில் தவெக மாநாடு நேற்று (அக்.27) நடைபெற்றது. இதில் பங்கேற்க அக்கட்சியின் தொண்டர்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து விக்கிரவாண்டிக்குப் பயணம் மேற்கொண்டனர். பயணத்தின் போது ஏற்பட்ட விபத்தில் தவெக தொண்டர்கள் 6 பேர் உயிரிழந்தனர்.
தொண்டர்களின் மறைவுக்கு கட்சித் தலைவர் விஜய் இரங்கல் தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:
`நமது தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டில் பங்கேற்பதற்காக, விக்கிரவாண்டி வி.சாலை நோக்கி வரும் போது, எதிர்பாராமல் நிகழ்ந்த சாலை விபத்துகளில் உயிரிழந்த கழகத் தோழர்கள்,
திருச்சி தெற்கு மாவட்ட இளைஞரணித் தலைவர் வழக்கறிஞர் திரு. கில்லி VL.சீனிவாசன், திருச்சி தெற்கு மாவட்ட துணைத் தலைவர் திரு. JK.விஜய்கலை, வசந்தகுமார், ரியாஸ், உதயகுமார், சார்லஸ் ஆகியோர் இன்று நம்மிடையே இல்லை என்பது அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது.
ஈடு செய்யவே இயலாத, தாங்கொணா இத்துயரில் இருந்து வெளிவரவே இயலாமல் மனம் தவிக்கிறது. கழகத்திற்காக இவர்கள் ஆற்றிய பணிகள் கழக வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கும். கழகத் தோழர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனிடம் வேண்டுகிறேன். மேலும், சாலை விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறும் கழகத் தோழர்கள் விரைவில் முழுவதும் குணமடைந்து, வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்’ என்றார்.