
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நேற்று கோவை வந்தபோது, அதிகளவில் கூட்டத்தைக் கூட்டி இடையூறு ஏற்படுத்தியதாக கட்சி நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இருந்தபோதிலும், விடுதியிலிருந்து கருத்தரங்கு நடைபெறும் இடத்துக்கு திறந்தவெளி வாகனத்தில் செல்கிறார் விஜய். இன்றும் அவருக்கான கூட்டம் கூடியுள்ளது. அவரும் வாகனத்திலிருந்தபடி தொண்டர்களுக்கு கைகளை அசைத்தபடி பயணித்து வருகிறார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களுக்கான வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கம் கோவையில் நேற்றும் இன்றும் இருநாள்கள் நடைபெறுகின்றன. கோவை குரும்பப்பாளையத்தில் உள்ள எஸ்என்எஸ் கல்லூரி வளாகத்தில் நடைபெறுகிறது.
இந்தக் கருத்தரங்கில் பங்கேற்பதற்காக கட்சித் தலைவர் விஜய் நேற்று விமானம் மூலம் கோவை சென்றடைந்தார். கோவையில் விஜயை வரவேற்க ஏராளமான தொண்டர்கள் கூடினார்கள். விஜயும் திறந்தவெளி வாகனத்தில் ஏறி சாலைப் பேரணி மேற்கொண்டார்.
பிறகு, விஜய் விடுதியிலிருந்து கல்லூரி செல்லும் வரை ஏராளமானவர்கள் இருசக்கர வாகனங்களில் தலைக்கவசமும் இல்லாமல் பாதுகாப்பற்ற சூழலில் பின்தொடர்ந்து சென்றார்கள். சிலர் தவறி வாகனத்திலிருந்து கீழே விழுந்ததையும் பார்க்க முடிந்தது.
பிற்பகலில் நடைபெற்ற கருத்தரங்கு கூட்டத்தில் ஏராளமான தொண்டர்கள் கூடியதால், கூட்டத்தைக் கட்டுப்படுத்துவது சற்று சவாலானதாகவே இருந்தது.
இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தினர் மீது கோவையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்துக்கு இடையூறு செய்தது, பொருள்களைச் சேதப்படுத்தியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் கோவை மாநகரக் காவல் துறை சார்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் 133 வாகனங்கள் மீதும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தபோதிலும், இன்று விஜயைக் காண தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் மீண்டும் கூடினார்கள். விடுதியில் விஜய்க்காகக் காத்திருந்தார்கள். விடுதியிலிருந்து கருத்தரங்கு நடைபெறும் இடத்துக்கு நேற்று காரில் சென்ற விஜய், இன்று திறந்த வாகனத்திலேயே அவிநாசி சாலை வழியாக கருத்தரங்கு செல்கிறார். நேற்றையக் கூட்டத்தைக் கருத்தில் கொண்டு இன்று காவல் துறையினர் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருந்தது. இருந்தாலும், வழிநெடுக மீண்டும் தொண்டர்கள் கூடி விஜய்க்கு ஆதரவைத் தெரிவித்து வருகிறார்கள்.