பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்திக்கு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவரின் 117-வது ஜெயந்தி மற்றும் 62-வது குருபூஜை விழா நடைபெறுகிறது. இதை முன்னிட்டு முதல்வர் மு.க. ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் பசும்பொன் சென்று நேரில் மரியாதை செலுத்தினார்கள்.
இதுதவிர பல்வேறு அரசியல் தலைவர்கள் ஆங்காங்கே தேவர் சிலைக்கு மரியாதை செலுத்தி வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் எக்ஸ் தளப் பக்கத்தில் தனது வாழ்த்தைப் பதிவு செய்துள்ளார்.
"அய்யா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருமகனார். இந்திய விடுதலைக்காகக் காத்திரமாகக் களமாடியவர். மாவீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் படையை வலுப்படுத்தத் துணை நின்றவர். பாராளுமன்ற, சட்டமன்ற அரசியலில் முத்திரை பதித்த பேச்சுக் கலைப் பேரரசர். சமூக நல்லிணக்கம் பேணியவர். தமிழக அரசியலின் முக்கிய அடையாளங்களில் ஒருவராகவும் மாறிய, மகத்தான மனிதரை அவரது குருபூஜைத் திருநாளில் வணங்கி வாழ்த்திப் போற்றுவோம்" என்று விஜய் குறிப்பிட்டுள்ளார்.