
தவெக பூத் கமிட்டி கருத்தரங்களில் பங்கேற்க அக்கட்சித் தலைவர் விஜய் கோவையை வந்தடைந்தார்.
நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த தவெகவின் வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கம், இன்றும் (ஏப்.26), நாளையும் கோவை மாவட்டம், குரும்பப்பாளையத்தில் உள்ள எஸ்.என்.எஸ். கல்லூரி வளாகத்தில் நடைபெறவுள்ளதாக அறிவிப்பு வெளியானது.
இந்த இரண்டு நாள் கருத்தரங்கில் விஜய் கலந்துகொண்டு வாக்குச்சாவடி முகவர்கள் மத்தியில், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான களப்பணிகள் குறித்தும், அது தொடர்பாகக் கட்சி சார்ந்து மேற்கொள்ள வேண்டிய கடமைகள் குறித்தும் விளக்கமாக உரை ஆற்ற உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இன்று காலை சென்னையில் இருந்து தனி விமானத்தில் கிளம்பிய விஜய், காலை 11 மணி அளவில் கோவை விமான நிலையத்தைச் சென்றடைந்தார். விஜயின் வருகைக்கு முன்பே கோவை விமான நிலைய வளாகத்தில் ஆயிரக்கணக்கான தவெக தொண்டர்கள் திரண்டதால் அங்கு கடுமையான நெரிசல் ஏற்பட்டது.
விமான நிலையத்தை விட்டு விஜய் வெளியே வந்ததும் தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பளித்தனர். விமான நிலையத்தில் இருந்து கிளம்பி நேரடியாக அவினாசி சாலையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தங்கவுள்ள விஜய், பிற்பகல் 3 மணி அளவில் கருத்தரங்கத்தில் கலந்துகொள்வார் என்று கூறப்பட்டுள்ளது.